மாலத்தீவுக்கு அன்று ராணுவத்தை அனுப்பி ஆட்சி கவிழ்ப்பை முறியடித்த இந்தியா இன்று மவுனம் ஏன்?
மாலத்தீவுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி கவிழ்ப்பை முறியடித்த இந்தியா இன்று மவுனமாக இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
டெல்லி: மாலத்தீவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பிளாட் எனும் ஈழத் தமிழ் விடுதலை இயக்கம் அதிபராக இருந்த கையூம் அரசை கவிழ்க்க முயற்சித்ததை 9 மணிநேரத்தில் முறியடித்தது இந்தியா. இன்று அதே மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு கையூம் உள்ளிட்டோர் நள்ளிரவில் வேட்டையாடப்படுகின்ற போதும் இந்தியா 'பார்வையாளராக' மவுனமாக இருக்கிறது.
1988-ம் ஆண்டு பிளாட் இயக்கத்தினர் இலங்கையில் இருந்து படகுகளில் மாலத்தீவின் மாலே நகருக்குள் ஊடுருவினர். நகரின் பல இடங்களை துப்பாக்கி முனையில் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து அதிபராக இருந்த கையூம், இந்தியாவின் உதவியை நாடினார். உடனடியாக இந்திய ராணுவ வீரர்கள் 1600 பேர் மாலத்தீவுக்கு விரைந்தனர். ஈழப் போராளிகளுடன் யுத்தம் நடத்தி 9 மணிநேரத்தில் ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடித்தது இந்தியா.
நள்ளிரவு கைதுகள்
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. அது ஒரு புறம் இருக்க இன்று மாலத்தீவு அவசர நிலையை எதிர்கொண்டிருக்கிறது; அரசியல் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தொடரும் மவுனம்
இப்படியான ஒரு நிலையில் அதுவும் இந்தியாவின் தலையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரிய நிலையிலும் மவுனம் காக்கிறது மத்திய அரசு. 30 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள அரசியல் இப்போது இல்லை என்பதும் உண்மைதான். முன்னைவிட இப்போது ராணுவ ரீதியாக மாலத்தீவுகளுக்கு அருகே நாம் முகாமிட்டிருக்கிறோம்.
கடும் எச்சரிக்கை இல்லை
அதேநேரத்தில் பொருளாதார ரீதியாக சீனா பெரும் முதலீட்டை மாலத்தீவில் செய்திருக்கிறது. ஐஎஸ் தீவிரவாதிகளை மாலத்தீவு அனுமதிக்கிறது என்கிற சந்தேகம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இப்படியான சூழலில்தான் எந்த ஒரு நாடும் இதுவரை மாலத்தீவு விவகாரத்தில் கடும் எச்சரிக்கையை விடுவிக்கவில்லை.
பயண எச்சரிக்கை மட்டும்...
இந்தியாவும் கூட, பயண எச்சரிக்கையை மட்டும் வெளியிட்டு நிலைமையை உன்னிப்பாக கவனிக்கிறோம் என கூறிவிட்டது. இருப்பினும் தென்னாசிய பிராந்தியத்தில் இலங்கைக்குள் சீனாவை நுழையவிட்டு இந்தியா தனது மேலாதிக்கத்தை இழந்தது; அதேபோல் மாலத்தீவிலும் சீனா நிலை கொண்டிருப்பதால் மேலாதிக்கத்தை இழப்பது என்பது வெளியுறவுக் கொள்கைகளுக்கு பின்னடைவுதான்.