தென் இந்தியாவுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்துக்கும் ஏன் கனெக்ஷன் போட்டார் மத்திய அமைச்சர்?
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தென் இந்தியாவை குறிவைப்பதாக பலமுறை உளவுத்துறை எச்சரித்தும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்தான், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு அதேபோன்ற ஒரு கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை கடிதங்களை கொடுத்தும்கூட, எந்த அரசும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக தமிழகத்தில், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக கொண்டு, தீவிரவாத இயக்கங்கள் தலை தூக்குகின்றன.
அல்-உம்மா தொடர்பு
அல்-உம்மா அதுபோன்ற ஒரு குரூப். அரசியல் கொலைகள், இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலைகள், தீவிரவாத செயல்களில் இவ்வமைப்புக்கு தொடர்புள்ளது. அத்வானி தமிழகம் வந்தபோது, குண்டு வைக்க முயன்றது அல்-உம்மா. பெங்களூரில் பாஜக அலுவலகத்துக்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பிலும் அல்-உம்மாவுக்கு தொடர்புள்ளது.
முதல் இந்தியர்
யதேர்ச்சையாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த, முதல் இந்தியரே தமிழகத்தை சேர்ந்தவர்தான். அவர் பெயர் காஜா பக்ருதின். சமூக வலைத்தளங்களில் காட்சியளித்த, ஐஎஸ்ஐஎஸ் டி-சட்டை அணிந்த இளைஞர்கள், சிலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இலங்கை வாலிபர் கைது
தமிழகத்தில் மும்பை பாணியில் ஒரு தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முயன்றது. கொழும்பில் இருந்து ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டார். இவற்றுக்கெல்லாம் பிறகும் இன்னும் தமிழகம் முழு முயற்சி எடுக்கவில்லை.
பிற மாநிலங்கள்
கர்நாடகாவில், மங்களூர், பத்கல் போன்ற பகுதிகளும், தெலுங்கானாவில் ஹைதராபாத் பகுதியும் தீவிரவாத நடவடிக்கை கொண்டதாக மாறிவருகிறது. கேரளாவுக்கும், அரபு நாடுகளுக்கும் உள்ள தொடர்பு, தீவிரவாதத்துக்கு ஒரு வகையில் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.