காங்.-மஜத கூட்டணியால் பாஜகவுக்கு பெரும் தலைவலி.. லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காத்திருக்கிறதா அடி?
Recommended Video
பெங்களூர்: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி பாஜகவினரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஆளும் கட்சிகள்தான் இடைத்தேர்தலில் வெல்லும் என்ற ஒரு கணிப்பு உள்ள நிலையில் ஜெயநகரை பொறுத்தளவில் 2004ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதியை வென்றுள்ளது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான, டேனிஷ் அலி இதுபற்றி கூறுகையில், 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டம் இந்த வெற்றி என்றார்.
வெற்றி உறுதி
வரும் லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கட்சி கூட்டணி 25 முதல் 28 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஜெயநகரில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஒதுங்கிக்கொண்டு, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது.
3 தொகுதிகள் காலி
இதற்கு பதிலாக இடைத்தேர்தல் நடைபெற உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளில் ஒன்றை காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டு தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய லோக்சபா தொகுதிகள் இப்போது காலியாக உள்ளன.
லோக்சபா தேர்தல்
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியின் காரணமாக பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறுகின்றன. இதே கூட்டணி லோக்சபா தேர்தலிலும் தொடரும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றே கருதப்படுகிறது.
தேசிய அரசியல்
தேசிய அளவிலும் பாஜகவை எதிர்க்க கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை கர்நாடகாவில் ஜெயநகர், இதற்கு முன்பாக ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் பெற்ற வெற்றி உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.