உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு வாபஸ்.. கபில் சிபல் 'க்ளவர் மூவ்'.. எப்படி தெரியுமா?
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதன் மூலம் தோல்வியடைந்ததை போல காட்சி தெரிந்தாலும், வெற்றி பெற்றது என்னவோ கபில் சிபல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்த சட்ட வல்லுநர்கள்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால் இந்த நோட்டீசை வெங்கையா நாயுடு ஏற்க மறுத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் எம்பிக்களான பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும், சட்ட வல்லுநருமான கபில் சிபல் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
நேற்று அவர் நீதிபதி செல்லமேஸ்வர் முன்னிலையில் வழக்கை தாக்கல் செய்தபோது, செவ்வாய்க்கிழமை கோர்ட்டை அணுகுமாறும், அப்போது வழக்கை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு என்பதால், அவருக்கு அடுத்த சீனியர் நீதிபதியான செல்லமேஸ்வரை கபில் சிபல் அணுகியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், திடீரென, கபில் சிபல் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி, தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே என்.வி.ரமணா, அருண்மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.
இன்று விசாரணை ஆரம்பித்ததும், இந்த ஐவர் நீதிபதி பெஞ்ச்சை உருவாக்கியது யார் என்ற கேள்வியை கபில் சிபல் நீதிபதிகளிடம் முன் வைத்தார். ஏனெனில், விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என தீர்மானிப்பதாக நீதிபதி செல்லமேஸ்வர் கூறிய ஒரு வழக்கில், திடீரென நீதிபதிகள் நியமிக்கப்பட்டு விசாரணையை ஆரம்பிக்க ஆயத்தம் நடந்துள்ளதால் கபில் சிபல் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கபில் சிபல் கேள்விக்கு பதிலளிக்க ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் மறுத்தது. எனவே மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் கபில் சிபல். இது ஒரு சிறப்பான மூவ் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
தலைமை நீதிபதி உருவாக்கிய ஒரு பெஞ்ச் அவருக்கு எதிரான ஒரு மனுவை விசாரிப்பதை கபில் சிபல் விரும்பவில்லை என்பதால் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். ஒருவேளை மனு விசாரிக்கப்பட்டு தள்ளுபடியாகியிருந்தால், அதுதான் இறுதியாக இருந்திருக்கும். நீதிபதி லோயா வழக்கில் அப்படித்தான் மனுதாரருக்கு எதிராக வழக்கு முடிவடைந்தது. அதுபோன்ற நிலை வராமல் இருக்க கபில் சிபல் சிறப்பாக மூவ் செய்துள்ளார் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
கபில் சிபலின் அடுத்த கட்ட நடவடிக்கை, மனுவை மேலும் மெருகேற்றி, அதை நீதிபதி செல்லமேஸ்வர் முன்னிலையில் தாக்கல் செய்வதாகத்தான் இருக்கும் என்கிறார்கள். ஏனெனில், தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, கடந்த ஜனவரியில் பேட்டியளித்த நான்கு சீனியர் நீதிபதிகளில் செல்லமேஸ்வரும் ஒருவர். அவருடன் அன்றைய தினம், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோரும் நிருபர்களிடம் பேட்டியளித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மே 19ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறை காலமாகும். அதன்பிறகு செல்லமேஸ்வர் வழக்கு விசாரணையை நடத்த முடியாது. அவர் ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக செல்லமேஸ்வர் முன்னிலையில் மனுவை தாக்கல் செய்து தீபஸ் மிஸ்ராவுக்கு எதிராக வழக்கை தீவிரப்படுத்த கபில் சிபல் முயலகூடும்.