கர்நாடகாவில் ஏன் நடக்கிறது பந்த்? மகதாயி நதி பிரச்சினை பின்னணி என்ன?
Recommended Video
பெங்களூர்: மகதாயி என கர்நாடக மக்களாலும், மான்டோவி என கோவா மக்களாலும் அழைக்கப்படும் வெறும் 87 கி.மீ நதிதான் இன்று இரு மாநிலங்கள் நடுவே நீரூபூத்த நெருப்பாக யுத்தம் நிலவ காரணம்.
கர்நாடகாவில் உற்பத்தியாகும் இந்த நதி, 35 கி.மீ தூரம் அம்மாநிலத்திலும், எஞ்சிய 52 கி.மீ தூரம், கோவாவிலும் பாய்கிறது. இதன்பிறகு அரபிக்கடலில் கலக்கிறது.
கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா எல்லைப்புற பகுதிகளிலுள்ள மக்கள் இந்த நதிநியை குடிநீர் தேவைக்காக நம்பிக்கொண்டுள்ளனர்.
கர்நாடக அரசின் ஆசை
இதில் கர்நாடக அரசு 7.56 டிஎம்சி அடி தண்ணீரை குடிநீர் தேவைக்காக கேட்கிறது. மகதாயி நதியின் கால்வாய்களான கலசா மற்றும் பண்டூரியில் தடுப்புகளை அமைத்து தண்ணீரை திருப்பி சுமார் 180 கிராமங்களுக்கு வினியோகிக்க வேண்டும் என்பது கர்நாடக அரசின் திட்டம். இதற்கான பணிகளை எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது 2002ம் ஆண்டிலேயே துவக்கி விட்டது கர்நாடக அரசு.
கோவா எதிர்ப்பு
ஆனால் கோவா அரசு இந்த திட்டத்தை கைவிட கோரிக்கைவிடுத்து சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. 2010ல் மகதாயி நதிநீர் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. அந்த நடுவர் மன்றம் கர்நாடக கோரிக்கையை ஏற்க மறுத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அப்போது வட கர்நாடகாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. காவிரி விவகாரத்திலும், நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு அது கர்நாடகாவிற்கு எதிராக இடைக்கால தீர்ப்பு வழங்கியபோது 1991ல் பெரும் கலவரம் வெடித்தது. பல தமிழர்கள் பலியானார்கள் என்பது நினைவில் இருக்கலாம்.
சுற்றுச்சூழல் கெடும்
கர்நாடக அரசு நதிநீர் திட்டத்தை கையில் எடுத்தால், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது கோவா வாதம். 700 ஹெக்டேர் பரப்பிலான வனம் நீரில் மூழ்கும், 60,000 மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்கிறது கோவா. இதனிடையே இந்த விவகாரம், அரசியலாக்கப்பட்டுவிட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும், கோவாவில் பாஜக அரசும் இருப்பதால் இது உக்கிரமாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அரசியல்
பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை சரி செய்யவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டுகிறார். எனவே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே, கர்நாடக பந்த் இன்று நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்குவதால் இந்த நெருப்புக்கு நெய் வார்க்கப்படுகிறது.