தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை நிறுத்தாதது ஏன்? சித்தராமையா கூறிய 'ராஜதந்திர' காரணம்!
பெங்களூர்: தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது: சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்த பிறகு, தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் கூறியபடி தண்ணீரை திறந்துவிடுவது என முடிவு செய்துள்ளோம்.
நீதிமன்றத்தின் மீது அரசுக்கு முழு நம்பிக்கையுள்ளது. சட்டப்போராட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து நடத்தும். குடிக்க தண்ணீர் இருக்காதோ என கர்நாடக மக்கள் அஞ்ச வேண்டாம். பெங்களூர், மண்டியா, மைசூர் உட்பட காவிரி நீரை நம்பியுள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும், அடுத்த வருடம் ஜூன் வரை குடிக்க தண்ணீர் தருவது அரசின் கடமை. அதற்கு உரிய ஏற்பாட்டை அரசு செய்யும்.
உச்சநீதிமன்றம் இப்போது பிறப்பித்துள்ளது ஒரு இடைக்கால உத்தரவுதான். ஆனால் நமக்கு, முக்கியமானது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடகா தொடர்ந்துள்ள வழக்குதான். காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என 2007ல் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்துள்ள மனு, அக்டோபர் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை கர்நாடகா பின்பற்றாவிட்டால் அது நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்க்கும் நமது வழக்கில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே நமக்கு கஷ்டம்தான் என்றபோதிலும், நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கிறோம்.
இம்மாதம் 5 மற்றும் 12ம் தேதிகளில் காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் கர்நாடகாவுக்கு பின்னடைவுதான். ஆனாலும், நீதிமன்றம் மீது அரசுக்கு நம்பிக்கையுள்ளது. சட்ட போராட்டம் தொடரும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளேன். ஆலோசனைக்கு நான் மட்டுமே டெல்லி செல்ல உள்ளேன். பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்க உள்ளேன். தமிழக முதல்வரையும் அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அப்போது கோரிக்கை விடுப்பேன் என்றார் சித்தராமையா.
காவிரி தொடர்பாக இதுவரை 8 முறை கடிதம் எழுதியும், மோடி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்று கேபினட் கூட்டத்தில் சித்தராமையா அதிருப்தி வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மோடியை சித்தராமையா சந்திக்க உள்ளார்.