ஜாதியை பெயருடன் பயன்படுத்த கூசும் தமிழகம்.. பகிரங்க ஜாதி அரசியல் செய்யும் கர்நாடகா.. காரணம் இதுதான்!
பெங்களூர்: தமிழகத்தில் ஜாதி பெயரை வெளியே சொல்வது நாகரீக சமூகத்திற்கு ஏற்ற செயல் அல்ல எனும் சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் ஜாதி என்பது வெளிப்படையாகவே அரசியல் அஸ்திரமாக பயன்படுகிறது. அங்கே ஜாதி பெயரை பின்னால் சேர்த்துக்கொள்வது இன்னும் கவுரவமாக உள்ளது.
ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக ஜாதியற்ற சமூகத்தை உருவாக்க தந்தை பெரியார் போன்ற சமூக போராளிகள், ஜாதி மற்றும் அதை கட்டமைக்கும் வைதீகங்களுக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
கடவுளை மற, மனிதனை நினை என்று பெரியார் கூறினார். ஜாதி பெயரை பின்னால் சேர்ப்பது இழிவு என நினைக்கும் நிலைக்கு இன்று தமிழகம் முன்னேறியுள்ளதற்கு காரணம் இதுபோன்ற ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுகள்தான்.
ஜாதி பற்று குறையும்
என்னதான் தனது ஜாதி மீது சிலருக்கு வெறி இருந்தாலும் அதை வெளியே காட்டிவிட முடியாத அளவுக்கு ஒரு சூழல் இருக்கம் தமிழகத்தில் எழுப்பப்பட்டுவிட்டது. நாளடைவில் ஜாதி மீதான பற்றுதல் குறைய இது வழிவகுக்கும் என நம்பலாம். ஆனால் பெரியாரின் ஈரோடு மண்ணுக்கு கொஞ்சம் கி.மீ தூரத்திலுள்ள கர்நாடக எல்லையில் ஆரம்பிக்கிறது, ஜாதியின் வாசம். தேவகவுடாக்களும், சதானந்த கவுடாக்களும், ஜனார்த்தன பூஜாரிகளும், பசவன கவுடா பாட்டீல்களும், அங்கே சுதந்திரமாக ஜாதி பெயரை சூட்டிக்கொள்ள முடிகிறது.
ஜாதி வேர்
கவுடா, பாட்டீல் பூஜாரி என்பதெல்லாம் அவர்களின் பெயர்கள் என தமிழகத்திலுள்ள கணிசமானோர் நினைத்திருக்க கூடும். ஆனால், அதில் ஒவ்வொன்றிலும் ஜாதியின் விதை வேரூன்றப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பெரியாரை போன்ற ஒரு புரட்சியாளர் பசவண்ணர் தோன்றிய மண்தான் கர்நாடகா. ஆனால், பெரியாருக்கும், பசவண்ணருக்குமான அணுகுமுறை வெவ்வேறாக இருந்தது.
உள்ளும், வெளியேயும்
கடவுளே இல்லை என்றார் பெரியார், உடம்பே கோயில், உள்ளே இருக்கிறார் சிவன் என்று சித்தர்கள் வரிசையில், தத்துவத்தை கொடுத்தவர் பசவண்ணர். ஜாதிக்கு வெளியே வந்து போராட அரைகூவல் விடுத்தவர் பெரியார். எது கீழ் ஜாதி என்றார்களோ அதையே மேல் ஜாதியாக மாற்றிக்காட்டுவோம் என்று உள்ளேயே புரட்சி செய்தவர் பசவண்ணர்.
காரணம் இதுதான்
பெரியாரை போன்றே ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைவதில் பசவண்ணர் 12ம் நூற்றாண்டில் புரட்சிகளை முன்னெடுத்தார். ஆனால், அதை மதம், மற்றும் ஜாதிக்குள்ளாகவே இருந்து செய்தார். இதனால் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றம் கண்டனர். ஆனால், ஜாதிக்குள் இருந்து வெளியே வரவில்லை. இதுதான் தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் உள்ள மிகப்பெரிய வேற்றுமை. நோக்கம் ஒன்று என்றாலும் தேர்ந்தெடுத்த வழிமுறைகளில் மாறுபாடு இருந்ததுதான் இன்றைக்கும் கர்நாடகா ஜாதி பெயரை விட்டுக்கொடுக்காததற்கு காரணம். எனவேதான் லிங்காயத்து ஜாதியை தனி மதப்பிரிவாக உருவாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. ஜாதி அங்கே பகிரங்கமாக அரசியல் அஸ்திரமாக்கப்பட்டுள்ளது.