அதுக்குள்ளயே பஞ்சாயத்தா?... குமாரசாமி ஏன் இப்படி புலம்புகிறார்?
கர்நாடக முதல்வர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவி என்பது முட்படுக்கை என்று குமாரசாமி கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மற்ற கட்சிகளை காட்டிலும் அதிக இடங்களில் வென்ற பாஜகவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இதனிடையே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்த காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. இதில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி பதவி விலகினார்.
தள்ளுபடி
இதையடுத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டு பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். இந்நிலையில் பல நாட்களாக பேரம் பேசி அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி பதவிகளை அளித்தார். இந்நிலையில் கர்நாடகத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்காக அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விலகுவேன்
இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் நான் முதல்வராக இருப்பதில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை போன்றதல்ல, முட்படுக்கை போன்றது. எனக்கு நெருக்கடி ஏற்பட்டால் நான் எந்த நேரத்திலும் பதவி விலகுவேன் என்று தெரிவித்தார்.
லட்சியங்கள்
பதவியேற்று ஓராண்டு கூட ஆகவில்லை. அதுக்குள் பஞ்சாயத்தா என்று மாநில மக்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் பதவியில் விரக்தியில் உள்ளதற்கான காரணங்களாக குமாரசாமி கூறுபவை இவை தான்- கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்ற வேண்டும். பாஜகவின் தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டும். எனது கட்சியான மஜதவின் லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும் ஆகியவை ஆகும்.
சகோதரர் நெருக்கடி
இதை வைத்து பார்க்கும் போது கூட்டணி கட்சியினரோ அல்லது சொந்த கட்சியினரோ பதவி கேட்டு குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. சில முக்கியமான பதவிகளை குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணா கேட்டதற்கு பொது பணித் துறையை மட்டும் அவருக்கு ஒதுக்கிவிட்டு இன்னொரு பதவியை சித்தராமையாவை தோற்கடித்த மஜத எம்எல்ஏவுக்கு குமாரசாமி வழங்கினார். எனவே பதவி கேட்டு ரேவண்ணா ஏதாச்சும் பிரச்சினை செய்கிறாரா. இல்லாவிட்டால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் சிக்கல் எழுந்துள்ளதா, எதிர்க்கட்சியான பாஜகவின் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றால் குமாரசாமி விரக்தி அடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.