இன்னும் ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வாரிசு அரசியலா? ரசிகர்கள் எரிச்சல்
Recommended Video
மும்பை: மும்பையில் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளது பல தளங்களில் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவக்க உள்ளதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், லதா ரஜினிகாந்த் மும்பையில், ராஜ்தாக்ரேவை சந்தித்து பேசியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். இதன்பிறகு பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார்.
பால்தாக்ரேவிற்கு நெருக்கமான ரஜினிகாந்த்
சென்னைக்கு வந்து நடிகராகி முன்னணி ஸ்டாராக மாறியுள்ளார். இருப்பினும், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ரஜினிகாந்த். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த், அவரை தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார். மகாராஷ்டிராவில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள் என்று கூறி அதற்காக நடந்த தாக்குதலில் முன்னின்றவர் என்ற குற்றச்சாட்டு மறைந்த பால் தாக்ரே மீது உள்ளது. பால்தாக்ரே தனக்கு கடவுளை போன்றவர் என ரஜினிகாந்த் கூறியதால் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
|
அரசியல் பேசினார்களாம்
இந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக கூறியுள்ள சூழலில், அவரது மனைவி லதா, நவநிர்மான் சேனாவின் தலைவரும், பால் தாக்ரேவின் தம்பி மகனுமான ராஜ் தாக்ரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜ்தாக்ரே வெளியிட்ட ட்விட்டிலும் கூட, லதா ரஜினிகாந்த்துடன் அரசியல் குறித்தெல்லாம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரேமலதா போலவா
அரசியல் கட்சியை ரஜினி ஆரம்பிப்பதாக கூறினாலும், லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விஜயகாந்த் என்னதான் வெளிப்படையான தலைவராகவும், தைரியமான தலைவராகவும் அறியப்பட்டாலும் அவர் மனைவி பிரேமலதா கட்சிக்குள் முக்கிய முடிவுகளை எடுக்க துவங்கியதால்தான் தேமுதிகவுக்கு சரிவு ஏற்பட்டது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். விஜயகாந்த்தின் உடல்நிலை பிரேமலதாவை உள்ளே வர வைத்திருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ஆக்டிவாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், லதா அரசியல் விவகாரங்கள் பற்றி ராஜ்தாக்ரேவிடம் ஆலோசிக்க வேண்டிய தேவை வந்துள்ளது என்பது ரஜினி ரசிகர்களுக்கே சற்று ஜெர்க் ஏற்படுத்தும் விஷயம்தான்.
|
வாரிசு அரசியல்
நெட்டிசன்களும் கூட லதா ரஜினிகாந்த்தின் இந்த செயல்பாட்டை ரசிக்கவில்லை. கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள், ரஜினிகாந்த் மனைவி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகிறாரே என்று விமர்சனக் கணைகளை முன் வைக்கிறார்கள். லதா ரஜினிகாந்த் ட்விட்டர் கணக்கு துவங்கியுள்ளதாக வரும் தகவல்களும் இந்த விமர்சனங்களுக்கு வலு சேர்க்கிறது. வாரிசு அரசியல் இப்போதே ரஜினி கட்சிக்குள் எழுந்துவிட்டதா என்ற ஐயத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.