மோடியின் ஆப்பிரிக்க நாட்டு சுற்றுப் பயணத்தால் இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆதாயங்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஆப்பிரிக்க நாட்டு சுற்றுப் பயணம் ராஜதந்திர ரீதியில் பல வகைகளில் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் வெளியுறவுத்துறை நிபுணர்கள்.
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு 2வது முறையாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக 2014 மே 26ம் தேதி ஒருமுறை சுற்றுப் பயணத்தை தொடங்கிய மோடி, இம்முறை, கடந்த 5 நாட்களாக ஆப்பிரிக்காவின் நான்கு முக்கிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல ஆப்பிரிக்காவுக்கு மோடி அடிக்கடி செல்லவில்லை என்றபோதிலும், ஆப்பிரிக்க நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துதான் வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகள் மாநாடு
2015ல் இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பு மாநாட்டை, டெல்லியில் நடத்தியது இந்தியா. 54 ஆப்பிரிக்க நாடுகள் அழைக்கப்பட்டன. 41 நாடுகளின் தலைவர்கள் அதில் பங்கேற்றனர், எஞ்சிய பிற நாடுகளோ தங்கள் துணை தலைவர்களை அனுப்பி வைத்து, விழாவை வெற்றிகரமாக மாற்றின.
ஒப்பந்தங்கள்
அந்த நாட்டின்போது, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் நடுவே, பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்த பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுகாதாரத்துறையிலும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடியரசு தலைவரும் விஜயம்
மோடி மட்டுமல்ல, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரும் முறையே மேற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உறவை பலப்படுத்த பாடுபட்டுள்ளனர்.
ஆதரவு கிடைத்தது
பிரிஸ்க் மாநாடு, ஜி20 மாநாடுகளில் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை சந்தித்து ஆலோசிக்க மோடிக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், அணு ஆயுத உறுப்பு நாடுகள் அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்க தென் ஆப்பிரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியான நிலையில், மோடி மீண்டும் ஒருமுறை ஜேக்கப் ஜுமாவை சந்தித்து, ஆதரவை உறுதி செய்தார் மோடி.
சுத்தம், லஞ்ச ஒழிப்பு
தான்சானியாவுக்கு மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் நல்லெண்ண பயண நோக்கம் மேலோங்கியுள்ளது. தான்சானிய அதிபர் ஜான் மகுஃபுலி, சுத்தம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் தருபவர். இதே விஷயங்களில் மோடியும் அதிக அக்கறை எடுதத்துக்கொள்வதால் அவர்கள் இருவரும், விவாதிக்க அதிக கருப்பொருள் இருந்ததாம்.
பருப்பு சப்ளை
கென்யாவை பொறுத்தளவில், அதை ஒரு மினி இந்தியா என்று வர்ணித்துள்ளார் மோடி. அந்த அளவுக்கு அந்த நாட்டுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. மொசாம்பிக் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பருப்பு சப்ளை தடையின்றி, வருவதை தனது பயணத்தில் உறுதி செய்துள்ளார் மோடி. இதனால் இந்தியாவில் பருப்பு விலையை கட்டுக்குள் வைக்க முடியும் என மோடி நம்புகிறார். இந்திய பெருங்கடல் மண்டலத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்து, தனது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் இந்தியாவுக்கு மொசாம்பிக் நாட்டின் உதவி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.