தேர்தல் தோல்விகளை மறைக்கிறாராம் மோடி... நாடாளுமன்றத்தில் காங். மீது 'காற்று' பாய்ச்சல்
டெல்லி: லோக்சபாவில் காங்கிரசுக்கு எதிராக வழக்கத்தைவிட ஆவேசமாக பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கே, இது 'அமேஸிங்' பேச்சு என டிவிட்டரில் சான்று வழங்குகிறார். எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்துவிட்டது என்கிறார் உள்துறை அமைச்சர்.
ஆனால் எதிர்க்கட்சிகளை தோலுரிக்கவா இந்த ஆட்சியை கொண்டுவந்தோம் என்பதே மக்களிடம் எழும் கேள்வி. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து மோடி நேற்று லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பேசியபோது, அவரின் பேச்சு முழுக்க காங்கிரசை டேமேஜ் செய்வதில்தான் இருந்தது.
மோடியின் கோபத்திற்கு ஜவகர்லால் நேரு முதல் ஜெய்ராம் ரமேஷ் வரை தப்பிக்கவில்லை.
நேரு மீதும் குற்றச்சாட்டு
இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் பட்டேல் பதவியேற்றிருந்தால் காஷ்மீர் முழுக்க இந்தியாவுடன் இருந்திருக்கும் என்ற அவர், சுல்தான் நடைமுறை மாறிவிட்டாலும் சுல்தான்கள் இன்னும் உலவுகிறார்கள் எனவும் குட்டு வைத்தார். ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து கேட்டு மோடியின் பேச்சுக்கு நடுவே தெலுங்கு தேசம் எம்.பிக்கள் கோஷமிட்ட நிலையில், ஆந்திர மண்ணின் மக்களை அவமதித்தது காங்கிரஸ் என்றும், மாநில உருவாக்கங்களின்போதெல்லாம் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்தது காங்கிரஸ் என்றும் கூறி, அந்த பக்கமாக பிரச்சினையை தள்ளிவிட்டார் மோடி.
ராகுல் காந்தி விமர்சனம்
இதுதவிர தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அரசு திட்டங்கள் வேகம் பிடித்துள்ளன என்று கூறி சில புள்ளி விவரங்களை எடுத்துக் கூறினார். ஆனால் இதெல்லாம் வெறும் ஃபார்மாலிட்டிதான். பேச்சின் 80 விழுக்காடு நேரத்தை காங்கிரஸ் எதிர்ப்புதான் ஆக்கிரமித்திருந்தது. காங். தலைவர் ராகுல் காந்தி இதைத்தான் குறிப்பிட்டு, பிரதமர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவில்லை, தேர்தல் உரை நிகழ்த்தியுள்ளார் என தெரிவித்தார்.
ராஜஸ்தான் தேர்தல்
மோடியின் ஆவேசத்திற்கு சில காரணங்கள் உள்ளன. ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் 1 சட்டசபை தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இம்மாநிலத்திற்கு இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே காங்கிரசுக்கு எதிரான கடந்த லோக்சபா தேர்தல் டைப் பிரச்சாரத்தை லோக்சபாவில் ஆரம்பித்துள்ளார் மோடி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரம்
4 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு பிறகு, இயல்பாகவே காங்கிரஸ் பக்கம் கணிசமான மக்களின் ஆதரவு போகத் தொடங்கியுள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற முன்னேற்றமும், ராஜஸ்தான் வெற்றியும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் மீதான கோபத்தை மீண்டும் மக்களிடம் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என மோடி நினைக்கிறார். எனவே தனது வழக்கமான அதிரடி உரைகளை ஆரம்பித்துவிட்டார் என்ற கருத்தும் உள்ளது.
நிஜ பிரச்சினைகள்
இன்னொரு விஷயமும் இதில் கவனிக்கத்தக்கது. நாட்டில் இப்போது வேலை இல்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையே விஷம் போல ஏறிக்கொண்டுள்ளது, பல மாநிலங்கள் நதிநீருக்காக சண்டை போடுகின்றன, விவசாயிகள் மழையின்றி தவிக்கிறார்கள், நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட்டில் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர், இதுபோன்ற அதி முக்கிய விஷயங்களுக்கு பதிலளிக்காமல் காங்கிரஸ் பற்றியே பேசி, விஷயத்தை திசை திருப்பியுள்ளார் மோடி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
வெற்று பேச்சுக்கள்
பிரதமர் மோடியின் ஆவேச உரை, மக்களுக்கு எந்த ஆறுதலும் தரவில்லை, எதிர்க்கட்சிகளுக்கும் பதில் கிடைக்கவில்லை. பாஜகவுக்கு மட்டுமே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதே வேகத்தில் பேசினால் காங்கிரஸ் மீண்டும் காலியாகும் என்பது மட்டுமே அவர்கள் மகிழ்ச்சிக்கு காரணம். காங்கிரஸ் தரப்பிலிருந்து மோடியின் பேச்சுக்கு அதே வேகத்தில் பதில் வராதது, பாஜகவுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், மக்கள் நினைப்பது என்னவோ ஒன்றே ஒன்றுதான், "வெற்று பேச்சுக்களை நிறுத்துங்கள்" என்பதுதான் அது.