யாருக்கும் லாபமில்லாமல் போனதால் ஒசாமாவைக் கை கழுவிய பாகிஸ்தான் !
டெல்லி: முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஆசாத் துர்ரானி ஒசாமா பின் லேடன் பற்றி தெரிவித்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் அரசு ஒசாமா பின் லேடனுக்கு பாதுகாப்பு அளித்து அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது ஒப்பந்ததின் ஒரு பகுதி என்று துர்ரானி தெரிவித்தார்.
துர்ரானி தெரிவித்ததில் முழுவதும் தவறு அல்ல என்று இந்தியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கூறியது பல வகைகளில் சரி. பின் லேடன் ஆப்கானிஸ்தானில் உள்ள குகையில் அல்லது பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இருந்தார்.
ஒசாமாவின் மரணம் ஒன்றும் யாருக்கும் தெரியாத ஒன்று அல்ல என்று இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியூகம்
9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா ஒசாமா பின் லேடனை நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டி ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. ஆப்கான் தாலிபான்களின் தலைவரான முல்லா உமருடன் ஒசாமா ஆப்கானிஸ்தானில் தான் இருந்தார் என்று நம்பத் தகுந்த தகவல் கிடைத்தது.
வான் வழித் தாக்குதல் நடத்தியும், தேடியும் ஒசாமாவையோ, உமரையோ கண்டுபிடிக்க முடியவில்லை என்றது அமெரிக்கா. பின் லேடன் குதிரையில் தப்பியிருக்கலாம் அல்லது ஆப்கானிஸ்தான் குகைகளில் பதுங்கியிருக்கலாம் என்று அமெரிக்கா பின்னர் தெரிவித்தது.
அந்த நேரம் ஒசாமா பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாகவும், அங்கு அவர் பாதுகாக்கப்படுவதாகவும் இந்திய ஏஜென்சீக்களுக்கு தகவல் கிடைத்தது. முல்லா உமரை ஐஎஸ்ஐ பலுசிஸ்தானுக்கு மாற்றிவிட்டது. அவர் தற்போதும் அங்கு தான் உள்ளார் என்று கூறப்படுகிறது.
பின் லேடனை நீதிக்கு முன்பு நிறுத்துவது அமெரிக்காவுக்கு முக்கியமானதாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் தேர்தல் நேரமாக இருந்தது. ஒசாமாவை கைது செய்தாலோ, கொன்றாலோ அது அரசுக்கு பக்கபலமாகும்.
ஒசாமா சரியான நேரத்தில் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் பலர் கருதுகிறார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு தெரியாமல் அமெரிக்காவால் அந்த தேடலை நடத்தியிருக்க முடியாது.
ஒசாமா
ஐஎஸ்ஐ மக்களை பயன்படுத்திக் கொண்டு பின்னர் கைவிடும் பழக்கம் கொண்டது என்று இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இது போன்று பல தீவிரவாதிகளுக்கு செய்துள்ளனர். அதில் சிறந்த உதாரணம் அல் கொய்தா தலைவர் இல்யாஸ் காஷ்மீரி.
இல்யாஸ் காஷ்மீரியை ஐஎஸ்ஐ வளர்த்து பாதுகாத்து பின்னர் அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்துவிட்டது. அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அவரை கொன்றது. காஷ்மீரியின் செயல்கள் ஐஎஸ்ஐக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை தனிமைப்படுத்த முடிவு செய்தது. ஐஎஸ்ஐ அவரின் 26/11 தாக்குதல் திட்டத்தை திருடி லஷ்கர் இ தொய்பாவிடம் அளித்தது. இது காஷ்மீரிக்கு பிடிக்கவில்லை.
ஒசாமா கொல்லப்படுவதற்கு முன்பே அவர் புகழ் மங்கத் துவங்கிவிட்டது. ஏற்கனவே ஒசாமாவை நீக்கிவிட்டு வாலிபர் ஒருவரை தலைவராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காஷ்மீரியை தான் தலைவராக்க திட்டமிடப்பட்டது.
ஒசாமா வீடியோ மூலம் பேசவும் இல்லை, முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் இல்லை என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது மெதுவாக அவர் யாருக்கும் உதவாத நபராகிவிட்டார். அதனால் தான் பாகிஸ்தான் அவரை கைவிடத் துணிந்தது.