திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சொத்துக்களை தணிக்கை செய்யாதது ஏன்? சுப்ரீம்கோர்ட் கேள்வி!
டெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ரகசிய அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை கணக்கு தணிக்கை செய்யாதது ஏன் என்று கோயில் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சொத்துக்களை அதனை நிர்வகிக்கும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அபகரித்துக் கொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் ரகசிய அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சொத்துக்களை தனிப் பிரதிநிதி ஒருவரை நியமித்து அவர் மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.
இந்த பணிகள் குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் கணக்குகளை அறக்கட்டளை நிர்வாகம் இதுவரை தணிக்கை செய்யாதது ஏன் என்றும், அதில் தயக்கம் காட்ட காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இது குறித்து 2 வாரங்களுக்குள் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் மன்னர் குடும்பம் மற்றும் கோயில் அறக்கட்டளைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.