ராகுல் காந்தியுடன் ரஜினி பட இயக்குநர் ரஞ்சித் திடீர் சந்திப்பு.. இதுதான் காரணமா?
Recommended Video
டெல்லி: டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குனர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசியுள்ளது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த சந்திப்பின் போது அரசியல் பேசிக் கொண்டதாக ராகுல்காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளள பேரறிவாளனின் விடுதலை குறித்து ராகுல் காந்தியிடம் பேசியதாகவும் அவர் தரப்பில் அதற்கு கிரீன் சிக்னல் காட்டியதாகவும் ரஞ்சித் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, தமிழகத்தை சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குனரை சந்தித்து அரசியல் பேசுவதற்கான தேவை என்ன வந்தது? என்ற சந்தேகங்கள் அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் கணக்கு
இந்த சந்திப்பு எல்லாமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முஸ்தீபுகள் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். கடந்த மாதம் டெல்லியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான, நடிகர் கமல்ஹாசனை ராகுல்காந்தி சந்தித்து பேசியதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள். ஆனால் இதை காங்கிரஸ் விரும்பவில்லை. திமுக கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள் ராகுல் காந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
சீண்டிய ஸ்டாலின் ட்வீட்
உதாரணத்திற்கு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாநிலக் கட்சிகளின் ஒற்றுமை மற்றும் மத்திய அரசுடன் பலமான நட்புறவுக்கு திமுக எப்போதுமே துணையாக நின்று உள்ளது. பாஜகவின் சர்வாதிகார ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் மமதா பானர்ஜியின் பெரும் முயற்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவு காங்கிரசை சீண்டும் வகையில் அமைந்திருந்தது.
வரிசையாக சந்திப்பு
இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாம் கட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ராகுல்காந்தி வரிசையாக சந்தித்து வருவதை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடந்த மாதம் டெல்லி சென்றிருந்த கமலஹாசன் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார் இதேபோல கடந்த மாதம் விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்
இந்திய தேசிய பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்த உள்ள மாநாட்டிற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு வந்ததாக திருமாவளவன் தெரிவித்தார். இந்த நிலையில் தான் ராகுல் காந்தியின் பா.ரஞ்சித்துடனான சந்திப்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. தொகுதி பங்கீட்டின் போது காங்கிரசுக்கு தேவைப்படும் இடங்களை கொடுக்காவிட்டால், திமுக கூட்டணியில் இருந்து விலகி இரண்டாம்கட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலின் மையப்புள்ளியா ராகுல் காந்தி
சிறு கட்சிகளுடன் காங்கிரஸ் இணைவது, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை பாதிக்க கூடும் என்பதால் திமுக காங்கிரசை புறக்கணிக்க முடியாது என்ற வியூகத்தை ராகுல்காந்தி வகுப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் ராகுல்காந்தி முன்னின்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக தான் பேரறிவாளன் விடுதலை குறித்தும் என்று பேசியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த அளவுக்கு திமுக கூட கருத்தை தெரிவித்து எதிர்க்கவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தமிழக அரசியலில் ராகுல் காந்தி முக்கிய பங்காற்ற திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.