உ.பி. தேர்தலில் ராஜ்நாத்சிங்கை முதல்வர் வேட்பாளராக்க பாஜகவில் கடும் எதிர்ப்பு
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை முதல்வர் வேட்பாளராக்க பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள சமாஜ்வாடி கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிரமாக உள்ளன.
அதேநேரத்தில் லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜக, சட்டசபை தேர்தலிலும் அறுவடை செய்து ஆட்சியை கைப்பற்ற மும்முரமாக உள்ளது. இதற்கான வியூகங்களில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதா? அல்லது யார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது என்பது தொடர்பாக பாஜக ஆலோசித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தலை சந்திக்கலாம்; முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்க வேண்டியது இல்லை என்பது பாஜகவின் திட்டமாக இருந்து வருகிறது.
ஆனால் இதற்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் எம்.பி. ராமகாந்த் யாத்வ், லோக்சபா தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் ஒன்றாக இணைந்து பாஜகவுக்கு வாக்களித்தனர். அதனால்தான் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71-ல் பாஜக வென்றது. ராஜ்நாத் சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்; அவரை முன்னிறுத்தினால் பாஜக தோல்வியைத்தான் தழுவும் என கூறியுள்ளார்.
இதேபோல் மற்றொரு முன்னாள் எம்.பி தரோகா பிரசாத் சரோஜ், ராஜ்நாத்சிங் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள் இடஒதுக்கீடு தரலாம் என்ற கொள்கையை கொண்டவர். ஆனால் இதை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிச்சயம் ஏற்கமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு கருத்து கணிப்புகள், வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக்குவதற்குதான் பாஜகவினர் மத்தியில் ஆதரவு இருப்பதாக வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதில் பாஜக மேலிடமும், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் விரும்பவில்லை. இதனால் யாரை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்வது என்பதில் பாஜகவில் குழப்பம் நீடிக்கிறது.