மறுகூட்டல் குளறுபடிகள் ஏன்? சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்
சி.பி.எஸ்.இ. மறுகூட்டல் மதிப்பெண் குளறுபடிகள் மீண்டும் தொடராது என்றும் அதற்கான நடைமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதன் தலைவர் அசோக் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. மறுகூட்டல் குளறுபடிகள் ஏன் என்று அதன் தலைவர் அசோக் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அதில் மீண்டும் பழைய நடைமுறைகளையே தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 10 லட்சத்து, 98 ஆயிரத்து 420 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர்.
தேர்வு முடிவுகளை தொடர்ந்து, பலரும் மறுகூட்டல் கோரி, விண்ணப்பம் செய்தனர். இதில், பல மாணவ, மாணவியருக்கு, அசல் தேர்வு முடிவுகளில் கிடைத்த மதிப்பெண்ணை விடவும், இருமடங்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உதாரணமாக, ஒரு மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, 68 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், மறுகூட்டலின் முடிவாக, 95 மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வாறு இருமடங்கு மதிப்பெண் வழங்கப்படுவது, அசல் விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி நடந்துள்ளதா அல்லது மறுகூட்டலின்போது குளறுபடி நடந்துள்ளதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி கூறுகையில், "இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழைய விடைத்தாள் திருத்தும் முறையை நாங்கள் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
ஆனால், சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தும் முறையில் இவ்வளவு நாட்களாக முறைகேடு நடந்துள்ளதாகவே, மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.