ரூ. 500 உதவித்தொகைக்காக 85 முறை போலி பிரசவ கணக்கு காண்பித்த நர்ஸ்... சஸ்பெண்ட்!
கரீம்கஞ்ச், அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநில கிராமம் ஒன்றில் அரசின் உதவித்தொகையைப் பெறுவதற்காக 85 முறை பிரசவமானதாக பொய்க் கணக்குக் காட்டிய நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ளது கரீம்கஞ்ச் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய கிராமம் ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்தவர் லில்லி பெகாம் லஸ்கர் என்ற பெண்மணி.
வீட்டில் பிரசவங்கள் நடைபெறாமல், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு வரவழைப்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களுக்கு ரூ. 500 உதவித் தொகை வழங்கி வருகிறது அம்மாநில அரசு,
இந்த உதவித் தொகைகளைப் பெற திட்டமிட்டுள்ளார் லில்லி. இதற்காக தான் வேலை பார்த்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 160 பிரசவங்கள் நடைபெற்றதாக கணக்குக் காட்டினார் அவர். அதில், சுமார் 85 பிரசவங்களை போலியாகச் சேர்த்தார். அவற்றில் கிடைத்த உதவித்தொகை பணமான ரூ. 40 ஆயிரத்தை தானே அபகரித்துக் கொண்டார்.
இந்நிலையில், அம்மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் லில்லியின் முறைகேடுகளைப் புகாராகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லில்லியின் குட்டு வெளிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் லில்லியை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லில்லி கூறுகையில், "என்னைப் போன்ற நர்சுகளுக்கு ஏகப்பட்ட மன அழுத்தம் உள்ளது. எங்களது எல்லா சேவைகளுக்கும் தக்க சன்மானம் கிடைத்து விடுவதில்லை. எனவே நான் 80க்கும் மேற்பட்ட போலியான பிரசவங்கள் நடந்ததாக கணக்குக் காட்டினேன். தற்போது அதற்காக மன்னிப்பு கோருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.