ஒபாமாவின் பயணம்... சமாதானமாகுமா செளதி?
டெல்லி: ஏமென் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கியிருக்கும் பதற்றமான சூழலில் அமெரிக்கா அதிபர் ஒபாமா செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது மிக முக்கியமான ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு செளதி அரேபியாவுக்கு செல்கிறார் அமெரிக்கா அதிபர் ஒபாமா. செளதி மன்னர் அப்துல்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒபாமா அந்நாட்டுக்கு செல்கிறார்.
இந்த பயணத்துக்காகவே ஆக்ரா செல்வதை ரத்து செய்திருந்தார் அவர். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒபாமாவின் இந்த செளதி அரேபியா பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
செளதியின் பங்கு..
அமெரிக்காவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையேயான உறவில் பல சிக்கல்கள் உள்ள நிலையில் ஒபாமா அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் செளதியின் எண்ணெய் வளத்தை நம்பி இல்லைதான். இருப்பினும் சர்வதேச எண்ணெய் சந்தையில் செளதியின் பங்கு மிக முக்கியமானது என்பதை அமெரிக்கா மறக்கவில்லை.
எண்ணெய் சந்தை
சர்வதேச எண்ணெய் சந்தையில் விலையை நிர்ணயிக்கும் கட்டுப்பாட்டைக் கொண்டது செளதி. அந்நாடு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்பதன் மூலம் சர்வதேச எண்ணெய் சந்தையின் விலை நிர்ணயிக்கப்படும் நிலைதான் நீடித்து வருகிறது. இதனால் செளதியுடனான உறவை அமெரிக்கா முக்கியமானதாகப் பார்க்கிறது.
இரட்டை கோபுர தகர்ப்பில்..
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது முதல் இருநாடுகளிடையே உறவில் கசப்புணர்வு வெளிப்பட்டது. ஏனெனில் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட 15 கடத்தல்காரர்கள் செளதியைச் சேர்ந்தவர்கள். இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக வெளியான 28 பக்க அறிக்கையில் செளதி நாட்டவரின் பங்கு குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எண்ணெய் சந்தையை மனதில் கொண்டு அமெரிக்கா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
செளதிக்கு சங்கடம்
மேலும் ஈரான் மற்றும் சிரியா விவகாரங்களில் அமெரிக்காவின் மென்மைப் போக்கு குறித்த கவலை செளதிக்கு இருக்கிறது. சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்காக காத்துக் கிடந்தது செளதி. இருப்பினும் அமெரிக்காவோ சிரியாவில் தமது நடவடிக்கைகளை மெதுவாகத்தான் மேற்கொண்டது. அதுவும் ரசாயன ஆயுதங்களை சிரியாவின் ஆசாத் அரசு பயன்படுத்திய பின்னரும் கூட அமெரிக்கா மெதுவாகவே செயல்பட்டு வருவது செளதிக்கு அசவுகரியமானதாகத்தான் இருந்து வருகிறது.
ஆதங்கம்..
அதேபோல் ஈரானின் அணு ஆயுதங்கள் விவகாரத்திலும் கூட அமெரிக்கா முழு வீச்சாக செயல்படவில்லை என்பது செளதியின் ஆதங்கம். செளதியைப் பொறுத்தவரையில் ஈரான் தொடர்ந்தும் அணு ஆயுதங்களை வைத்திருப்பது தங்களுக்கு ஆபத்தானதாக கருதுகிறது. இதனால் ஈரான், சிரியா விவகாரங்களில் அமெரிக்காவின் செயல்பாட்டை செளதி சற்றே சந்தேகத்துடனேயே அணுகுகிறது.
ஏமன் விவகாரம்
குறிப்பாக ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கியிருப்பது செளதியை கலக்கமடையச் செய்துள்ளது. இந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பின்னணியில் ஈரான் இருப்பதாக செளதி கருதுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு ஏமனில் ஈரான் மறைமுகமாக ஆட்சியை நடத்த முயற்சிப்பதாக செளதி கருதுகிறது. இது தங்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்பது செளதியின் எண்ணம்.
சமாதானமாகுமா செளதி?
ஒபாமாவின் தற்போதைய பயணத்தின் போது செளதியின் இந்த சந்தேகங்கள், அச்சங்கள் விரிவாக விவாதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.