யாரையும் கொலை செய்யலையே... ஏன் வாழ்நாள் தடை?: கொந்தளிக்கும் ஜூவாலா கட்டா
இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி தொடரில் கடந்த ஆகஸ்ட் 25ந் தேதி நடந்த டெல்லி ஸ்மாஷர்ஸ்-பெங்களூர் பங்கா பீட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது சர்ச்சை வெடித்தது. பெங்களூர் அணியில், காயமடைந்த ஹூ யுன்னுக்கு பதிலாக டென்மார்க்கை சேர்ந்த ஜான் ஜோர்கென்சனை மாற்று வீரராக சேர்க்க கடைசி நிமிடத்தில் போட்டி அமைப்பாளர்கள் ஒப்புதல் அளித்ததற்கு டெல்லி அணியின் வீரர், வீராங்கனைகள் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இந்த ஆட்டத்தில் ஆடமாட்டோம் என்று மிரட்டலும் விடுத்தனர்.
டெல்லி அணி திடீரென போர்க்கொடி தூக்கியதன் பின்னணியில் கேப்டன் ஜூவாலா கட்டா இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது இந்தியன் பேட்மிண்டன் சங்கம்.
ஆனால் இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் போய் தடையை உடைத்தார் ஜூவாலா கட்டா. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், நான் யாரையோ கொலை செய்துவிட்டது போல எனக்கு வாழ்நாள் தடையெல்லாம் விதித்தனர். இந்தியன் பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் நான் சொல்ல வருவதையே கேட்க தயாராகவில்லை.
நான் எனது நாடுக்கு கவுரவத்தை அளிக்கவே விரும்புகிறேன். நான் இந்த நாட்டுக்காக விளையாடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.