ஸ்ரீதேவி உடல் மீது மூவர்ணக் கொடி ஏன்?: இதோ சட்டம் என்ன சொல்லுதுனு பாருங்க
ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
மும்பை: ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டது மாநில அரசின் உரிமைகளுக்குள்பட்டது என்று சட்டம் கூறுகிறது.
துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை ஹோட்டல் அறையின் பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்தார். உடற்கூறாய்வில் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவரது உடல் நேற்று முன் தினம் மும்பை கொண்டு வரப்பட்டது. நேற்று அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டது. பின்னர் மாநில அரசின் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஏன் அரசு மரியாதை
ஸ்ரீதேவியின் மறைவு அவரது ரசிகர்களுக்கு துக்ககரமாக இருந்தபோதிலும் குடிபோதையில் கால் தவறி விழுந்து இறந்த நடிகை ஸ்ரீதேவி காசுக்காக நடித்தார். அதைத் தவிர அவர் இந்த நாட்டுக்கு என்ன செய்துவிட்டார், அவருக்கு முழு அரசு மரியாதை என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.
சரியா தவறா
சினிமா நட்சத்திரத்துக்கு மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு முழு அரசு மரியாதை செய்த மகாராஷ்டிர அரசு செய்தது சரியா தவறா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. அதில் இன்னாள் மற்றும் முன்னாள் பிரதமர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களுக்கு மட்டுமே மாநில அரசு மரியாதை செய்ய வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இந்த விதிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
கொடி விதிமுறைகள்
இந்திய நாட்டின் கொடி விதிகளின் படி வெளிநாட்டுகளை சேர்ந்த முக்கிய உயர்பதவி அதிகாரிகள் யாரேனும் உயிரிழந்துவிட்டால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு உத்தரவுக்கு ஏற்ப இரங்கல் தெரிவிக்கப்படும். அதே மாநிலத்தின் தலைவர், இந்திய மற்றும் வெளிநாட்டு அரசுகளின் தலைவர் உயிரிழந்துவிட்டால் தேசியக் கொடி அறை கம்பத்தில் பறக்கவிடப்படும்.
எரிக்க கூடாது
மாநில, ராணுவ, மத்திய துணை ராணுவ படை ஆகியோரின் இறுதி சடங்குகளின்போது அவர்கள் மீதோ அல்லது அவர்களின் சவப்பெட்டியின் மீதோ மூவர்ணக் கொடி போர்த்தலாம். அதில் காவி நிறம் முகம் இருக்கும் பக்கத்தில் வைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டு கொடியை உடலோடு நல்லடக்கம் செய்வதோ அல்லது எரிப்பதோ கூடாது.
மாநில அரசின் சுய உரிமை
இந்தியாவில் முதல்முறையாக அரசு மரியாதையுடன் மகாத்மா காந்திக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அதன் பிறகு அரசில் பணியாற்றியோருக்கு மட்டுமே அந்த மரியாதை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் முழு அரசு மரியாதை யாருக்கு கொடுப்பது கொடுக்கக் கூடாது என்பது அந்த அரசின் விருப்பத்தை பொருத்தே ஆகிவிட்டது. அதன் படி அறிவியல், சினிமா, இலக்கியம், சட்டம், அரசியல் ஆகிய துறைகளில் சிறப்பான பங்காற்றியவர்களுக்கு அரசு மரியாதை வழங்குவது என்பது மாநில அரசின் விருப்ப உரிமையானது. எனவே ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ணக் கொடி போர்த்தியதும், அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டதும் மாநில அரசின் விருப்ப உரிமை பொருத்தே அமைந்துள்ளது. இதில் சட்ட விதி மீறல் ஏதும் இல்லை என்பது கிளியராக தெரிகிறது.