யாகூப் மேமன் விவகாரத்தில் பொறுப்பற்று செய்தி ஒளிபரப்பு: 3 முன்னணி சேனல்களுக்கு அரசு நோட்டீஸ்
டெல்லி: இந்திய நீதித்துறைக்கும், குடியரசு தலைவர் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் விடுதலை விவகாரத்தில் செய்திகளை ஒளிபரப்பிய மூன்று சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1993ம் ஆண்டில் நடந்த, மும்பை குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு கடந்த 30ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆளுநர், ஜனாதிபதி போன்றோரும் கருணை மனுவை நிராகரித்த பிறகு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஊடகங்கள்
இருப்பினும், யாகூப் மேமனை அநியாயமாக தூக்கிலிட்டதை போன்று சிலர் கருத்து தெரிவித்து, குறிப்பிட்ட மதப்பிரிவினர் மத்தியில் அவநம்பிக்கையை தூண்டினர். இதை சில ஊடகங்களும் முன்னுரிமை கொடுத்து ஒளிபரப்பியது.
தாதாவுக்கே போன்
ஹிந்தியில் முன்னணியிலுள்ள ஆஜ்தக் மற்றும் ஏபிபி செய்தி சேனல்கள் ஒருபடி மேலேபோய், நிழலுலக தாதா சோட்டா ஷகிலை போனில் தொடர் கொண்டு தூக்கு தண்டனை குறித்து அவரது 'கருத்தை' கேட்டன. சோட்டா ஷகில் அளித்த பேட்டியில், இந்திய நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும், யாகூப் மேமனை அப்பாவி என்றும் வர்ணித்தார்.
உள்நோக்கம்
என்டிடிவி சேனல், யாகூப் மேமனின் வழக்கறிஞரை பேட்டிகண்டு, எத்தனை நாடுகளில் மரண தண்டனை நீக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டது.
உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களும், நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியும் பரிசீலித்து எடுத்த முடிவை இந்த சேனல்களின் செய்தி உள்நோக்கத்துடன் களங்கம் கற்பித்துவிட்டதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கருதுகிறது.
நோட்டீஸ்
எனவே, 1994ம் ஆண்டு கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிமுறைகள் சட்டத்தின் 3 பிரிவுகளின்கீழ், மேற்கண்ட சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது' என்று விளக்கம் தெரிவியுங்கள் என்று கேட்டுள்ளது. பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே
பதில் வந்தபிறகு, உள்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை ஆகிய 3 முக்கிய துறைகளின் அதிகாரிகளும், பதில் திருப்திகரமாக உள்ளதா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பார்கள். வயது வந்தோருக்கான காட்சிகளை காண்பித்ததற்காக என்டிடிவி குட்டைம்ஸ் மற்றும் டிஎல்சி ஆகிய சேனல்கள் 30 நாட்களுக்கு இந்தியாவில் ஒளிபரப்ப ஏற்கனவே தடைக்கு உள்ளாகியிருந்தன. இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை காண்பிக்காமல் செய்தி ஒளிபரப்பியதற்காக, அல்ஜசிரா சேனல் 5 நாட்களுக்கு தடைக்குள்ளாகியிருந்தது நினைவிருக்கலாம்.