ப்ரீயா கொடுத்தா போதுமே.. ரயில் நிலையங்களில் இலவச வைபையை "இதுக்குத்தான்" யூஸ் பண்றாங்களாம்!
டெல்லி: ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்பாட்டில் உள்ள இலவச இணையவசதி மூலம் ஆபாச தளங்கள் அதிகளவில் பார்க்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக இலவசமாக அளிக்கப்படும் இணைய வசதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொழில்நுட்ப புரட்சியையடுத்து மத்திய அரசு பொது இடங்கள் மற்றும் முக்கியமான தளங்களில் பொதுமக்கள் வசதிக்காக இலவச இணையத்தைவசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இலவச இணைய சேவையை வழங்கி வருகின்றன.
ரயில் நிலையங்களில் வைபை
ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் இலவச வைபை வசதியைப் பயன்படுத்தி பலவித தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்தியா முழுவதும் 23 ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக இலவச வைபை இன்டர்நெட் வசதி ரயில்டெல் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆபாச இணையதளங்கள்
பொதுமக்கள் இலவச இணையத்தின் மூலம் ஆபாச படங்களுக்கான இணையதளமே அதிக அளவில் பார்த்துள்ளனர். குறிப்பாக ரயில்நிலையங்களில் பயன்படுத்தப்படும் இலவச இணைய வசதியை பயன்படுத்தி ஏராளமானோர் ஆபாச இணையதளத்தை பார்ப்பதாக தகவல் வந்துள்ளது.
பாட்னா ரயில் நிலையம்
கடந்த மாதம் பாட்னா ரயில் நிலையத்தில் வைபை அறிமுகம் செய்யப்பட்டது முதல் இங்கு பெரும்பாலோனோர் ஆபாச தளங்களைப் பார்வையிடவே இணைய வசதியை பயன்படுத்துகின்றனர் என்றும், யூ-டியூப், விக்கிபீடியா இரண்டையும் அதிகமான பேர் பார்வையிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
இலவச வைபை வசதியை பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது நல்ல விஷயமாக இருந்தபோதிலும், ஆபாச இணையதளங்களை பார்ப்பது அதிகரித்திருப்பதால் பாட்னா ரயில் நிலையம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. நாளொன்றுக்கு 200 ரயில்கள் பாட்னா ரயில் நிலையம் வழியாக கடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
இலவச இணையம்
வைபை வசதி அதிகம் பயன்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் 2வது இடத்தை ஜெய்ப்பூர் ரயில் நிலையமும், 3வது இடத்தை பெங்களூரும், 4வது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளன. முக்கிய பொதுஇடங்கள் மற்றும் ஸ்தலங்களில் இலவச இணையம் தவறான முறையில் பயன்பாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது 1 ஜிகாபைட் இன்டர்நெட் வழங்கப்பட்டு வருவதாகவும் இதனை 10 ஜிகாபைட்டாக விரைவில் அதிகரிக்கவிருப்பதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.