கர்நாடகாவில் விதவை தாயை சீரழித்து குழந்தைகள் முன்பு கொலை செய்த 3 பேர்
பெங்களூர்: கர்நாடகாவில் விதவை தாய் ஒருவர் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மி(28). கணவனை இழந்த அவர் இரண்டு குழந்தைகளை தனியாக வளர்த்து வந்தார். துப்புரவு தொழிலாளியாக அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை தேமஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ், தவ்ரே சாமி மற்றும் நந்தா ஆகியோர் ஒரு புதருக்கு தூக்கிச் சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காராம் செய்தனர்.
பின்னர் அவரை கொலை செய்தனர். தங்கள் தாயை விட்டுவிடுமாறு குழந்தைகள் கதறியும் அவர்கள் லக்ஷ்மியை விடவில்லை. அந்த 3 பேரும் குழந்தைகளிடம் உங்களையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். குழந்தைகள் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து ஊர் மக்களை அழைத்து வர ஓடினர்.
கிராமத்தினர் வருவதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனர். போலீசார் வந்து பார்த்தபோது லக்ஷ்மியின் உடல் கபினி கால்வாயில் கிடந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் லக்ஷ்மியின் குடும்பத்தாருக்கு தேசிய சபாய் கர்மாச்சாரி கமிஷன் தலைவர் ஷிவண்ணா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார். மேலும் ரூ. 3.75 லட்சத்துக்கான காசோலையை லக்ஷ்மியின் குடும்பத்தாரிடம் அவர்அளித்தார். இது தவிர லக்ஷ்மியின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரை கேட்டுக் கொண்டார்.