தடையை உடைத்த பிருந்தாவன் விதவைகள்... உற்சாக தீபாவளி கொண்டாட்டம்!
பிருந்தாவன ஆசிரமத்தில் உள்ள விதவைகள் முதன்முறையாக உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிருந்தாவன்: உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஆசிரமத்தில் முதன் முறையாக அங்குள்ள விதவைகள் தீபாவளி கொண்டாடினர். தீபங்களை ஏற்றி வழிபட்ட அவர்கள், நடனமாடியும், உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.
பிருந்தாவன் நகரத்தில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களில், ஏராளமான விதவைப் பெண்கள் தங்கி உள்ளனர். இவர்களில், பெரும்பாலானவர்கள், கணவர் இறந்ததும் குடூம்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள். சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்டுள்ள, இந்த விதவைகளின் நிலையை மேம்படுத்த பாடுபட்டு வரும், 'சுலாப் இன்டர் நேஷனல்' என்ற அமைப்பு, கடந்த காலங்களில், இந்த விதவைகளை, ரக்ஷா பந்தன், ஹோலி பண்டிகை கொண்டாட்டங் களில் பங்கேற்க வைத்தது. இவர்களுக்காக, சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தது.
நாடுமுழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிருந்தாவன் விதவைகளுக்காக, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 700க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வியாழக்கிழமையன்று பிருந்தாவனில் உள்ள பழமை வாய்ந்த கோபிநாத் ஆலயத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டின.
தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட அவர்கள், நடனமாடியும், பலவித போட்டிகளிலும் உற்சாகமாக பங்கேற்றனர். கணவருடன் கடைசி தீபாவளி கொண்டாடியதாக கூறிய அந்த பெண்கள், நீண்ட நாட்களுக்குப் பின்னர் இப்போதுதான் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடியதாக தெரிவித்தனர். சொந்தங்களால் கைவிடப்பட்டு சோகமே வடிவாக இருந்த இந்த பெண்கள் தீபாவளி கொண்டாடியது காண்பர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.