என் மனைவி சேலை கட்டுகிறார், யாரும் டீஸ் செய்வதில்லை.. சொல்வது கோவா அமைச்சர்!
பனாஜி: சேலை கட்டுவதால் தனது மனைவி என்றுமே ஈவ்டீசிங்கிற்கு ஆளானதில்லை என மனைவியின் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் கோவா அமைச்சர் தீபக் தவாலிகர்.
சமீபத்தில் இந்து ஜனஜக்ருதி சமிதி ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட தவாலிகரின் மனைவி லதா, ‘சமீபகாலமாக பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதற்கு காரணம் பெண்கள் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறியதே' எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தவாலிகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எனது மனைவி தனது வாழ்நாள் முழுவதும் சேலை அணிந்து, குங்குமம் வைத்து வாழ்ந்து வருகிறார். அதனால், இதுவரை அவரை யாரும் ஈவ்-டீசிங் செய்ததில்லை. எனவே, தனது அனுபவத்தைத்தான் அவர் மற்றவர்களுக்குத் தெரிவித்துள்ளார்' என விளக்கமளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முன்பெல்லாம் பாலியல் பலாத்காரங்கள் குறைவாக இருந்தன. காரணம், அப்போதெல்லாம் பெண்கள் இந்து தர்மத்தின்படி வாழந்தனர். எனவே அப்படிப்பட்ட சம்பவங்கள் குறைவு. இப்போது கலாச்சாரம் மாறியதால் பிரச்சினைகளும் கூடியுள்ளன என்றார் அவர்.