நள்ளிரவு பார்ட்டிக்கு போகும் மனைவி: விவாகரத்து கேட்ட கணவரின் மனு தள்ளுபடி
மும்பை: படுக்கை அறையில் குறட்டை விட்டால் விவாகரத்து கேட்பது வழக்கமாகி வரும் நிலையில் நள்ளிரவு பார்ட்டிக்கு மனைவி செல்கிறார் என்று கூறி விவாகரத்து கேட்டுள்ளார் ஒரு கணவர். ஆனால் மனைவி நள்ளிரவு பார்ட்டிக்கு செல்வது கணவருக்கு மனரீதியிலான சித்ரவதை அல்ல என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது மும்பை நீதிமன்றம், அது மட்டுமல்லாது விவாகரத்து கேட்ட கணவனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மும்பையை சேர்ந்த கப்பல் மாலுமி வினோத், கவுதமிக்கு கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு, வினோத் கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில், "எனது மனைவி அடிக்கடி நள்ளிரவு விருந்துக்கு செல்கிறார். குடிபோதையில் வீடு திரும்புகிறார். சிறிய விஷயத்துக்கு கூட கோபப்படுகிறார். என்னிடம் அவமதிப்பாக நடந்து கொள்கிறார். எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவி கவுதமியிடம் இருந்து வினோத்துக்கு விவாகரத்து வழங்கி 2011ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கவுதமி மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. இதை எதிர்த்து வினோத், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.எல்.தஹலியானி முன்னிலையில் நடந்தது. அப்போது, விசாரணைக்கு பின்னர் வினோத்தின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி, இன்றைய சமுதாயத்தில், இதுபோன்ற விருந்துக்கு செல்வது ஓரளவுக்கு அனுமதிக்கத்தக்கதுதான்.
வினோத் கூறுவதை போன்று அவரது மனைவி குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் மது குடித்து விட்டு வீடு திரும்பினார் என்பதற்கு ஆதாரம் இல்லை. பெண்ணின் கணவரும் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். ஒரு தடவை பெண் தோழியை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அப்போது அந்த பெண் தோழியும் மதுபோதையில் இருந்திருக்கிறார்.
இந்த வழக்கை பொறுத்தவரை கணவன், மனைவி இருவருமே சாதாரணமான வாழ்க்கையை நடத்தவில்லை அல்லது தாராள போக்குடன் நடந்து கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. இருவருமே விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே இந்த வழக்கில் கணவரை மனைவி சித்ரவதை செய்கிறார் என்று கூறி ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. மேலும் கணவரை உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்துகிறார் என்றும் கூற முடியாது. எனவே குடும்பநல நீதிமன்றம் வினோத்துக்கு விவாகரத்து வழங்கி தவறு செய்து விட்டது. வினோத் மனைவியின் மேல் முறையீட்டு மனு மீது அப்பீல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்று கூறினர்.