சிறை தண்டனை எதிரொலி.. ஹைகோர்ட்டில் அப்பீல்.. லாலு பிரசாத் யாதவ் முடிவு
ராஞ்சி: தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாயை முறைகேடாக பெற்ற வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் ஆகிய தண்டனைகளை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் சக குற்றவாளிகள் பஹூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுஷில் குமார், சுதீர் குமார், ராஜாராமுக்கு தலா 3.5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி ஜெகதீஷ் ஷர்மாவுக்கு 7 வருடம் சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இவர்கள் யாருமே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடியாது. ஹைகோர்ட்டைதான் அணுகியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஷ்வி கூறுகையில், தண்டனையை எதிர்த்தும் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.