உ.பி. சட்டசபை தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி?
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை அறிவிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் உ.பி.யில் மொத்தம் உள்ள 80-ல் 71 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது பாஜக. இதனால்தான் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடிந்தது.
ஆகையால் இந்த முறை உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வென்று அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் வியூகங்களை வகுத்து செயல்படுகிறது பாஜக. இதன் ஒரு பகுதியாக யாரை முதல்வர் வேட்பாளராக முன்னரே அறிவித்து களமிறக்கலாம் என தீவிர ஆலோசனை அக்கட்சியில் நடைபெற்று வருகிறது.
முதல்வர் வேட்பாளராக ஸ்மிருதி இரானி?
மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் ஸ்மிருதி இரானி. இருந்தபோதும் அமேதி தொகுதியில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அந்த மக்களுடன் இணைந்த ஒருவராக இருந்து வருகிறார். ஆகையால் அவரை முன்னிறுத்தலாம் என பாஜகவின் ஒருதரப்பு ஆலோசித்து வருகிறது. ஸ்மிருதி இரானியை மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான குழு முன்னிறுத்துகிறது. ஆனால் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இதனை எதிர்க்கின்றனர்.
ஸ்மிருதிக்கு எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் பிரியங்கா காந்தியும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம். ஆகையால் பாஜகவும் ஸ்மிருதி இரானியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது அவரது ஆதரவாளர்கள் கருத்து. ஆனால் ஸ்மிருதி இரானியை முன்னிறுத்தினால் அவர் இந்த மாநிலத்துடன் தொடர்பில்லாத வெளிநபர் என்ற பிரசாரம் தலைதூக்கும் என்கிறது எதிர்தரப்பு. ஆகையால் பாஜகவின் இளம் தலைவராக பார்க்கப்படும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண்காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்கிறது ஸ்மிருதி இரானி எதிர் தரப்பு.
தலித்துகள் வாக்குகள் போய்விடுமே...
அத்துடன் உத்தரப்பிரதேச தேர்தலில் தலித்துகளின் வாக்குகளை அறுவடை செய்ய பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு காரணமே ஸ்மிருதி இரானி என ஒருதரப்பு கூறும் நிலையில் அவரை முன்னிறுத்தினால் கிடைக்க வேண்டிய வாக்குகளும் போய்விடும் என அலறுகிறது ஸ்மிருதி ரானியின் எதிர்தரப்பு.
ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது?
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் ஸ்மிருதி இரானியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதை விரும்பவில்லையாம். அந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில் தங்களுடன் தொடர்புள்ள ஒருவரே பாஜகவின் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறதாம். சர்ச்சைக்குரிய ஸ்மிருதி இரானியின் செயல்பாடுகள் மீது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு நம்பிக்கையில்லை என்றும் அந்த இயக்கத் தலைவர்கள் வெளிப்படையாக கூறி வருகிறார்களாம்..
இத்தனையையும் மீறி ஸ்மிருதி இரானி முதல்வர் வேட்பாளரா? வருண் காந்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இறுதி முடிவெடுக்கும் சக்தியாக இருக்குமா? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.