ஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்!
Recommended Video
திருப்பதி: ஏபிபிடிவி - சிவோட்டர் நேற்று வெளியிட்ட மூட் ஆபி த நேஷன் கருத்துக் கணிப்பில் தென் மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் சரிவு ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது. தென் மாநிலங்களின் எதார்த்தத்தைக் கவனித்தால் அதில் பெருமளவு உண்மை இருக்கும் என்பதை அறியலாம்.
உதாரணத்திற்கு ஆந்திராவை எடுத்துக் கொண்டால் சந்திரபாபு நாயுடு, பாஜக மீது அத்தனை காட்டமாக இருக்கிறார். என்னை குறி வைத்திருக்கிறது பாஜக. ஆனால் பயப்பட மாட்டேன் என்று கோபாவேசம் காட்டி வருகிறார் நாயுடு. ஆந்திராவில் பாஜகவை தோற்கடிப்பதில் மற்றவர்களை விட தெலுங்கு தேசம்தான் அதிக அக்கறை காட்டி வருகிறது.
ஆந்திர மக்களை ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிராக திருப்பும் வேலையிலும் தெலுங்கு தேசம் இறங்கியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்தோ அல்லது சிறப்பு நிதியோ தர பிரதமர் மோடி மறுத்து விட்டதையே தனது முக்கியப் பிரசாரமாக கையில் எடுத்துள்ளது தெலுங்கு தேசம்.
[ஆமாம், வரிசையில்தான் நிற்கிறேன்.. தலைமை பொறுப்பை ஏற்க அல்ல.. உதயநிதி பேச்சு]
தெலுங்கு தேசத்திற்கு எதிராக தாக்குதல்
உண்மையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் பலமுனைத் தாக்குதலை சந்தித்து வருகிறது. பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். கூடவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும் நாயுடுவைக் குறி வைத்து களம் இறங்கியுள்ளார். இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக நாயுடுவும் கூறி வருகிறார்.
இந்திராவையே எதிர்த்தவன் நான்
நாயுடு கூறுகையில் நான் இந்திரா காந்தியுடன் அரசியல் செய்தவன். இந்திய அரசியலில் இதுவரை மோடியைப் போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. என்னைக் குறி வைத்து செயல்படுகிறது பாஜக. என் மீது பொய் வழக்குகளைப் போட்டு வேட்டையாடத் துடிக்கிறார்கள். ஆனால் நான் பயப்பட மாட்டேன். எத்தனை சதி செய்தாலும் நான் அஞ்ச மாட்டேன்.
காங்கிரஸை விட மோசம்
மாநிலத்தை இரண்டாகப் பிரித்த காங்கிரஸை விட பாஜக மோசமாக உள்ளது. பாஜகவை வீழ்த்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பலமுனைத் திட்டத்தை நாங்கள் தீட்டி வருகிறோம். 2014ல் சிறப்பு அந்தஸ்து தருவதாக உறுதியளித்தது பாஜக. ஆனால் ஆந்திர மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது என்று கூறியுள்ளார் நாயுடு.
காங்.குடன் கை கோர்ப்பாரா
பாஜகவுக்கு எதிராக முழு வீச்சில் கிளம்பியுள்ள நாயுடு காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கை கோர்ப்பார் என்று தெரிகிறது. மேலும் பாஜகவுக்கு எதிரான சக்திகளை அகில இந்திய அளவிலும் அவர் திரட்டி பாஜகவை முழுமையாக எதிர்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை பாஜகவுக்கு ஆதரவான அலை என்று எதுவும் இல்லை. அதேசமயம், நாயுடு என்ற சிறந்த அரசியல்வாதி, பாஜகவுக்கு எதிராக தீவிரமாக இருப்பதால் ஆந்திராவில் பாஜக பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றே பலரும் கூறுகிறார்கள்.