உ.பி. சட்டசபை தேர்தல்: ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக?
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யாரையும் அறிவிக்கும் திட்டம் எதுவும் இருக்காது எனவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளது.
அலகாபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த செயற்குழுவில் உத்தரப்பிரதேச தேர்தலுக்கான வியூகம்தான் பிரதான அம்சமாக இருக்கும் என்கின்றனர்.
தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் உ.பி. முதல்வருமான ராஜ்நாத்சிங்கை முன்னிறுத்துவதற்கு பாஜக மேலிடமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் விரும்புகிறது. ஆனால் கருத்து கணிப்புகளில் ராஜ்நாத்சிங்குக்கு போதிய ஆதரவு இல்லை; பாஜகவில் வருண்காந்திக்கே பெரும்பான்மையினோர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண்காந்தியை பாஜக மேலிடமோ, ஆர்.எஸ்.எஸ். இயக்கமோ முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த தயாராகவும் இல்லை.
அதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாஜக முன்னிறுத்தலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அனைத்து கருத்து கணிப்புகளிலுமே ஸ்மிருதி இரானிக்கு 1% அல்லது 2% ஆதரவுதான் கிடைத்தது. இதனால் பாஜகவில் குழப்பம் நீடித்து வருகிறது.
ஆனாலும் அஸ்ஸாமில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து ஆட்சியைப் பிடித்தது வேறு; உத்தரப்பிரதேச நிலைமை என்பது வேறு என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கவில்லை என்பதையும் பாஜகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகையால் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்காமல் ராஜ்நாத்சிங்கை முன்னிறுத்தி உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலை பாஜக எதிர்கொள்ளவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.