சிக்கிம் முதல்வர் சாம்ளிங்குக்கு அடுத்த பிரதமராக பிரகாச வாய்ப்பு?
டெல்லி: நாட்டின் அடுத்த பிரதமர் நானே என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும் தொங்கு லோக்சபா அமைந்தால் அனேகமாக சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்ளிங் பிரதமராக வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறுகிறார் பிரபல பொருளாதார நிபுணரும், அரசியல் விமர்சகருமான ஸ்வாமிநாதன் அங்கலேசரிய அய்யர்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை:
லோக்சபா தேர்தல் தொடர்பாக மாதாந்திர கருத்து கணிப்புகளை பல்வேறு அமைப்புகள், ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாஜக, காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பிடித்தாலும் மாநிலக் கட்சிகள் ஒன்றாக இணைந்தால் அவையே கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்றே கூறப்படுகிறது.
இதனால் பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸ் ஆதரவிலான ஒரு அரசுதான் மத்தியில் அமையக் கூடும் என்று கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி என்னதான் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருந்தாலும் அது கணிசமான இடங்களைக் கைப்பற்றத்தான் உதவுமே தவிர பிரதமர் பதவியை கைப்பற்ற பயன்படாது என்றும் கூறப்படுகிறது.
மாநில கட்சிகள் ஆதிக்கம்?
அதாவது 1996-98ஆம் ஆண்டைப் போல மாநில கட்சிகளின் ஆதிக்கத்துடனேயே மத்திய அரசு அமையும் என்றே கூறப்படுகிறது.
கனவு காணும் தலைவர்கள்
அதனால்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் பிஜூ பட்னாயக் போன்றோர் பிரதமர் கனவில் வலம் வருகின்றனர்.
வலுவற்றவரே பிரதமர்..
ஆனால் அரசியல் பார்வையாளர்கள் யதார்த்தமான ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். 1996,98ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் இப்போது பேசப்படுகிற பிரதமர் கனவு காணும் தலைவர்கள் பலரும் இருந்தாலும் தேவகவுடா, குஜ்ரால் போன்ற வலுவற்றவர்களே பிரதமராக்கப்பட்டனர். இதற்கு காரணம் பாஜக, காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள், மாநிலங்களில் தங்கள் கட்சியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கக்கூடிய ஒரு தலைவரை பிரதமராக்க விரும்புவதில்லை என்பதுதான் என்கின்றனர் அவர்கள்.
தீர்மானிக்கும் பாஜக, காங்கிரஸ்
இப்போதைக்கு அப்படியான அரசியல் தலைவர்கள் யார் இருக்கிறார்கள் என்ற தேடலில் இந்தியாவின் பெரும்பான்மையான மாநில தலைவர்கள், பாஜக மற்றும் காங்கிரஸின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். மூன்றாவது அணி அல்லது மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் போது அதற்கு ஆதரவு தரப்போகிற பாஜகவோ, காங்கிரஸோ நிச்சயமாக இந்த கனவு காணும் தலைவர்களை பிரதமர் நாற்காலியில் அமர்த்தி குடைச்சலை சொந்த காசில் வாங்கிக் கொள்ளுமா என்பது சந்தேகமே?
4 முறை முதல்வர்
அப்படியானால் இந்த பதவிக்கு யார் பொருத்தமானவர்? 3 முறை சட்டசபை தேர்தலில் வென்றதாலேயே நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்றால் 4 முறை சட்டசபை தேர்தலில் சப்தமில்லாமல் வென்று ஆட்சி செய்யக் கூடியவர் ஒருவர் பொருத்தமானவராக இருக்கமாட்டாரா?
காங், பாஜகவுக்கு பாதிப்பில்லை
அதுவும் அவரை பிரதமராக்கினால் நிச்சயமாக காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு ஒருவிழுக்காடு சேதாரம் கூட எங்கேயும் விழுந்து விடாது என்கிற போது இந்த இரு கட்சிகளும் அவரை பிரதமராக்க அதாவது இன்னொரு தேவகவுடா, குஜ்ராலை உருவாக்க முன்வராமல் இருக்குமா?
சிக்கிம் முதல்வர் சாம்ளிங்
இந்த புதிய தேவகவுடா வேறு யாருமல்ல.. சிக்கிம் மாநில முதல்வர் பவன் குமார் சாம்ளிங்தான் என்கின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சாம்ளிங்கின் கட்சி 32 சட்டசபை தொகுதிகளில் அனைத்தையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பிரதரமாக்கினால் தாங்கள் சொல்கிறபடி செயல்படுகிற பிரதமராகவும் இருப்பார் என்பது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இன்னொரு வாய்ப்பு..
இதனாலேயே லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக, காங்கிரஸ் தயவை எதிர்ப்பார்த்தால் அனேகம் பவன் குமார் சாம்ளிங்தான் அடுத்த பிரதமராக வாய்ப்பிருக்கிறது என்கிறார் அய்யர்,