பாஜக ஆட்சியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை நாடு கடத்துவோம்: மோடி எச்சரிக்கை
கொல்கத்தா: மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் நாட்டின் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் நாடு கடத்தப்படுவர் என்று அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 16ஆம் தேதிக்குப் பிறகு நமது நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் அனைவரும் மூட்டை, முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு தங்களது நாட்டை நோக்கி வெளியேற வேண்டியிருக்கும்.
வங்க தேசத்தினரை வாக்கு வங்கியாகக் கருதி அவர்களை மமதா பானர்ஜி வெளியேற்றாமல் விட்டு விட்டார். வங்க தேசத்தினரை மம்தா பானர்ஜி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்.
ஆனால் பீகாரில் இருந்து இங்கு வரும் மக்களையும், ஒடிஸாவில் இருந்து இங்கு வருவோரையும் விரட்டியடிக்கிறீர்கள். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தாராளமாக அனுமதிக்கிறீர்கள். அவர்களை மனமுவந்து வரவேற்கிறீர்கள்.
இப்படியான வாக்கு வங்கி அரசியல் மூலம் இந்த நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை இடதுசாரி கட்சிகள் 35 ஆண்டுகள் சீரழித்தனர். ஆனால் மமதா பானர்ஜியோ 35 மாதங்களில் அவர்களை விட கூடுதலாக நாசப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
வங்கதேசத்தவருக்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள்...
அசாம் மாநிலத்தில் முன்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நரேந்திர மோடி, சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தவர்களுக்கு இடம் ஒதுக்குவதற்காக நாட்டின் அரிய வகை விலங்கினமான காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டிப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.