மாட்டிறைச்சி தடை பற்றி பேசினா என் வேலைக்கு உலைதான்... பொருளாதார ஆலோசகர் அலறல்
மும்பை: மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவது குறித்து பேசினால் தம்முடைய வேலை பறிபோய்விடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மாணவர்களின் கேள்விக்கு அரவிந்த் சுப்ரமணியன் பதிலளித்தார்.
அப்போது, மாட்டிறைச்சியை தடை செய்தால் விவசாயிகளின் வருமானத்தில் அல்லது கிராம பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அரவிந்த் சுப்ரமணியனோ, உங்களுக்கு தெரியும் நான் இந்த கேள்விக்கு பதிலளித்தால் என்னுடைய வேலை பறிபோகும்; நான் என்னுடையை வேலையை இழக்க விரும்பவில்லை என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அண்மையில் பெங்களூரில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அரவிந்த் சுப்ரமணியன், நாட்டில் உள்ள சமூக பிளவுகளும், பதற்றமான சூழலும் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் எனவும் கூறியிருந்தார்.