Exclusive: தூர்தர்ஷன் சேனல் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரப்படும்: பிரசார் பாரதி சிஇஓ
தூர்தர்ஷன் சேனல் முதலிடத்திற்கு கொண்டுவரப்படும் என்று பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி சசி சேகர் வேம்பதி, 'ஒன்இந்தியா' இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
டெல்லி: பிரசார் பாரதி நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இன்போசிஸ் நிறுவன முன்னாள் ஊழியரான சசி சேகர் வேம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் பிரசார் பாரதியின் போர்டில் பகுதிநேர உறுப்பினராக செயல்பட்டவர். துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி தலைமையிலான, பிரசார் பாரதியின் மூன்று உறுப்பினர்களை கொண்ட குழு, சசி சேகர் வேம்பதியை பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
பிரசார் பாரதி என்பது மத்திய தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். பிரசார்பாரதியின்கீழ், ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் ஆகியவை இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த சிறப்பு பேட்டியில் சசிதர் சேகர் கூறியதாவது: 2022க்குள் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் புகழை மீட்டெடுப்போம். அப்போது மற்ற மீடியாக்கள் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவுடன் ஒப்பிட்டால் பின்னால்தான் இருக்கும்.
ஒட்டுமொத்த சூழலையும் பிரசார் பாரதிக்கு நம்பகத்தன்மையுடன் கூடியதாக மாற்ற வேண்டியுள்ளது. பங்குதாரர்கள், வெளியிலிருக்கும் பார்ட்னர்கள், மிகப்பெரிய ஊழியர்கள் ஆகியோர்ககளுக்கு நம்பிக்கையான சூழலை உருவாக்குவது முதல் நோக்கம். நான் பிரசார் பாரதி என கூறுவது டிடி மற்றும் ஆல் இந்தியா ரேடியா ஆகியவற்றை சேர்த்துதான்.
கடந்த பல வருடங்களில் நிறைய சிக்கல்களுக்கு தீர்வு காணப்படாமல் அப்படியே விட்டுவிட்டது துரதிருஷ்டவசமானது. இதனால்தான் நம்பிக்கை குறைந்துவிட்டது. செயல்பாடுகளில் நம்பிக்கையை கொண்டுவர முயற்சி செய்வேன் இதன்மூலம், பிரசார் பாரதியை பணியாற்றுவதற்கான பெருமைமிகு இடமாக மாற்றுவேன்.
கே: மால்குடிடேஸ் போன்ற பழைய சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பப்படுமா அல்லது புதிய நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவீர்களா?
ப: தூர்தர்ஷன் சேனலின் மீதான பழைய நினைவுகள்தான் அந்த சேனலுக்கு பலமே. அதை வைத்துதான் ரசிகர்கள் நம்பிக்கையை தக்க வைக்க முடியும். அதேநேரம், ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையிலான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். இளைஞர்களின் எண்ணங்களை கண்டுபிடிக்க வேண்டும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தூர்தர்ஷனை பிரிக்க முடியாததாக மாற்ற வேண்டும் என்றார்.
கே: தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை, பிபிசி போலவோ அல்லது அல்-ஜசீரா போலவோ உலகளாவிய அடையாளங்களாக மாறுமா?
ப: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. எனவே இந்த உலகத்திற்கு இந்தியாவின் குரலை கொண்டு சேர்க்க வேண்டியது நமது பொறுப்பு. நமது கலாசாரம், நமது பண்பாடு, நமது நற்செயல்கள் பல கோடி மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கும். இந்தியாவின் நிகழ்வை உலகம் அறிய வேண்டியது கட்டாயம். எனவே இதை பிரசார் பாரதி செய்யும். வரும் சவால்களை தாண்டிச் செல்வோம்.
கே: சோஷியல் மீடியாவில் ஆல் இந்தியா ரேடியோவும், தூர்தர்ஷனும் குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளதாக கருதுகிறீர்களா?
சோஷியல் மீடியாவில் இருப்பை தொடங்கியாகிவிட்டது. இதை விரிவுபடுத்த வேண்டும். இது எங்களது முக்கியமான நோக்கமாக இருக்கும்.
கே: இந்த டிஜிட்டல் உலகத்தில் தூர்தர்ஷனையும், ஆல் இந்தியா ரேடியோவையும், சிறந்த போட்டியாளர்களாக உருவாக்க என்ன செய்யப்போகிறீர்கள்?
ப: பிரசார் பாரதி வெற்றிக்காக விஷன் 2022 என்ற டிஜிட்டல் ரோட் மேப் கொண்டுவர உள்ளோம். விரைவில் இந்த செயல் திட்டம் தயாராகும்.
கே: மத்திய அரசின் செயல்பாடுகளில் டிடி மற்றும் ஆல்இந்தியா ரேடியோ முக்கிய பங்கு வகிக்குமா?
ப: ஏற்கனவே இதுபோன்ற விஷயங்களில் பிரசார் பாரதி ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளது. ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் போன்ற மத்திய அரசு திட்டங்களுக்கு பிரசாரங்கள் செய்து வருகிறது.
கே: தனியார் டிவி சேனல்கள் டிடி சேனலை விட முந்திவிட்டனவே, அரசு போதிய அளவுக்கு டிடி சேனலை பிரபலப்படுத்த உதவியுள்ளதா?
ப: இந்தியாவில் டிடி நெட்வொர்க் மிக அகண்ட நேயர் பரப்பை கொண்டுள்ளது. இது எங்கள் பலம். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய நிகழ்ச்சிகள் மூலமாக இதை விரிவுபடுத்த வேண்டும். முதலில் கலாசார மாற்றம் தேவைப்படுகிறது. பிறகு டெக்னாலஜி விஷயங்கள் பின்னால் தானாக வரும். 2022க்குள் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ பெருமை மீட்டெடுக்கப்படும். அப்போது பிற சேனல்கள் இதனுடன் ஒப்பிட்டால் பின்தங்கியிருக்கும். இவ்வாறு சசி சேகர் வேம்பதி தெரிவித்தார்.