டெல்லி திரும்பினார் மோடி... கருணாநிதியைப் பார்க்க வருவாரா?
Recommended Video
டெல்லி: ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்றே நாடு திரும்பி விட்டாலும் கூட அவர் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்க வருவாரா என்பதில் இதுவரை தெளிவான நிலை தெரியவில்லை.
பிரதமர் நரேந்தரி மோடி ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ருவாண்டாவுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். 2 நாள் அங்கு இருந்தார். அதேபோல தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின்போது சீனா, ரஷ்யா அதிபர்களுடன் அவர் பேச்சும் நடத்தினார்.
நேற்று அவர் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்க சென்னை வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது கருணாநிதி ஓரளவு நல்ல உடல் நலத்தோடு இருந்தார். பேச முடியாத நிலையிலும் கூட பிரதமரை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.
இந்த நிலையில் தற்போது கருணாநிதி மிகுந்த மோசமான உடல் நலத்துடன் உள்ளார். காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கருணாநிதியைப் பார்க்க பிரதமர் மோடி வருவாரா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சென்னை வந்து கருணாநிதி உடல் நலம் விசாரிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.