காங்கிரஸில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா நந்தன் நிலகேனி?
காங்கிரஸ் சார்பில் நிலகேனி போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆதார் கார்டு இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. இந்த கார்டு மூலமே மக்களுக்கு நேரடியாக மானியங்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
எனவே ஆதார் கார்டு திட்டத்தை செயல்படுத்தியவரான நந்தன் நிலகேனிக்கு சீட் கொடுத்து தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.
தெற்கு பெங்களூரில் அவர் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தத் தொகுதியிலிருந்து பாஜகவின் அனந்தகுமார் வழக்கமாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஐந்து முறை இங்கு அவர் வென்றுள்ளார். நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும் இது.
இருப்பினும் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்திகள் வெறும் யூகமே என்று நிலகேனி கூறியுள்ளார். அதுகுறித்து விளக்கம் அளிக்கவும் அவர் மறுத்துள்ளார்.
இருப்பினும் நிலகேனியை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தால் நிலகேனிக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்படியே அவர் மத்திய அமைச்சரானால், தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து மத்திய அமைச்சரான முதல் வர்த்தக தலைவர் என்ற பெயரைப் பெறுவார்.