வாசல் வரைக்கும் வந்துட்டீங்க.. அப்படியே வீட்டுக்குள்ளயும் வந்துருங்க.. நிதீஷுக்கு அமித் ஷா அழைப்பு!
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைய வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி பெயரை பாஜக அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்து நிதிஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாஜக உதவியுடன் பீகாரில் ஆட்சியமைத்து தனது பதவியில் நீடிக்கிறார் நிதிஷ் குமார். டெல்லி வந்த அவர் அங்கு பிரதமர் நரேந்திர மோடியையும், அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். அப்போதுதான் இந்த அழைப்பை விடுத்தார் அமித் ஷா.
Met Chief Minister of Bihar Shri @NitishKumar. pic.twitter.com/gUnIRzSxf4
— Amit Shah (@AmitShah) August 11, 2017
அமித் ஷா அழைப்பை நிதிஷ் குமாரும் ஏற்பார் என்றே தெரிகிறது. இதற்கு வசதியாகவே இன்று தனது கட்சித் தலைவர் சரத் யாதவை ராஜ்யசபா கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கியுள்ளார். ஆகஸ்ட் 19ம் தேதி நிதிஷ் குமார் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், மோடி அமைச்சரவையிலும் இணையும் முடிவை நிதிஷ் குமார் கட்சி எடுக்கும் என்று தெரிகிறது.