அர்ச்சனா ராமசுந்தரத்தை சி.பி.ஐ. நிறுவனத்தில் நியமிக்கும் எண்ணமில்லை: மத்திய அரசு
டெல்லி: ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை சி.பி.ஐ. நிறுவனத்தில் நியமிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
கடந்த 1980ம் ஆண்டில், தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக போலீசில் பல பதவிகளை வகித்தவர். கடைசியாக, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை இயக்குனராக இருந்த போது, மத்திய அரசு பணிக்காக அர்ச்சனா ராமசுந்தரத்தின் பெயரை கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு அனுப்பியது. இதைத்தொடர்ந்து அர்ச்சனா ராமசுந்தரத்தை சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி மத்திய அரசு நியமித்தது. ஆனால் தமிழக அரசு பணியில் இருந்து விடுவிக்கப்படாத நிலையில், அர்ச்சனா ராமசுந்தரம் டெல்லி சென்று சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்று பணியில் சேர்ந்தார்.
பணியிடை நீக்கம்
மத்திய அரசு பணிக்கு செல்லும் முன், தமிழக அரசிடம் அனுமதி கேட்கவில்லை' என்று கூறி ஜெயலலிதா அரசு அவரை, பணியிடை நீக்கம் செய்தது.அதுபோல, கூடுதல் இயக்குனராக அவரை நியமிக்கும் முன், மத்திய அரசிடம் ஆலோசிக்கவில்லை என, சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்கா, சர்ச்சையில் சிக்கினார்.
சட்ட போராட்டம்
இதனால், பல சட்ட சிக்கல்களையும், போராட்டங்களையும் அர்ச்சனா சந்தித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, ஓராண்டாக அவருக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை.அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குனராக மத்திய அரசு நியமித்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பத்திரிகையாளர் வினித் நாராயண் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார். அவர், தனது மனுவில், இந்த பதவிக்கான அதிகாரியை நேரடியாக நியமிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், அர்ச்சனா ராமசுந்தரம் நியமனத்தில், மத்திய அரசு தேவையான விதிமுறைகளை கடை பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மத்திய அரசுக்கு கேள்வி
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் நீதிபதிகள், "இந்த வழக்குத் தொடரப்பட்டதும், சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் பணியை ஆற்ற வேண்டாம் என அர்ச்சனா ராமசுந்தரத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்ட போதே, அந்த உத்தரவு பொது நல வழக்கு மீதான தீர்ப்புக்கு உள்பட்டது எனக் குறிப்பிட்டோம்.
சொலிசிட்டர் ஜெனரல்
ஒரு வேளை அந்த அதிகாரிக்கு சாதகமாக உத்தரவு வந்தால் மீண்டும் அவரை சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் பொறுப்பில் மத்திய அரசு நியமிக்குமா?' என்று கேட்டனர். ஆனால், இக்கேள்விக்கு உடனடியாகப் பதில் தெரிவிக்க முடியாது என சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறினார். இதையடுத்து, இந்தக் கேள்விக்குரிய பதிலை மத்திய அரசிடம் இருந்து பெற்று நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கவும். அதுவரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு முடித்து வைப்பு
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், அர்ச்சனா ராமசுந்தரம் தற்போது தேசிய குற்ற ஆவண அலுவலகத்தின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீண்டும் சி.பி.ஐ. நிறுவனத்தில் நியமிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் கூறினார். மேலும் இது தொடர்பாக மத்திய அரசின் கடிதம் ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு இதுபோன்ற உத்தரவாதம் ஒன்றை அளித்துள்ளதால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்து உத்தரவிட்டனர்.