ராகுலை கிளார்க் வேலைக்கு கூட சேர்க்க மாட்டேன்: இது ராம்ஜெத்மலானி குசும்பு
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எனது கிளார்க்காக கூட வேலைக்கு எடுக்க மாட்டேன் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராகுல் காந்தியை என் கிளார்க்காக கூட வேலைக்கு வைக்க மாட்டேன். என் கிளார்க் ஒரு நேர்மையான அமைச்சரை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார். நான் கூறுவது நேர்மையானவரின் சம்பளத்தை பற்றி. ஊழல்வாதியின் சம்பளம் விண்ணைத் தொடும் என்றார்.
ராகுலை பற்றி கருத்து தெரிவித்து ராம்ஜெத்மலானி சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னதாக அவர் மும்பையில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல இந்தி பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனா சந்தாவர்கரை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார்.
ஒரு மூத்த வழக்கறிஞர் மாற்றானின் மனைவிக்கு அதுவும் பொது இடத்தில் இப்படியா முத்தம் கொடுப்பது என்று பலரும் அவரை விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.