சீனிவாசன் அதிரடி நீக்கம் - கவாஸ்கரை இடைக்காலத் தலைவராக நியமித்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனை நீக்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 7வது ஐபிஎல் தொடர் முடியும் வரை கவாஸ்கரை இடைக்காலத் தலைவராக நியமித்தும் அது உத்தரவிட்டுள்ளது.
பதவி விலகாமல் சீனிவாசன் இழுத்தடித்து வந்ததைத் தொடர்ந்து இன்று அதிரடியாக இந்த உத்தரவைப் பிறப்பித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக நேற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த சில பரிந்துரைகளில் சீனிவாசனை நீக்கி விட்டு கவாஸ்கரை தற்காலிக தலைவராக நியமிக்கலாம் என்று கூறியிருந்தது.
ஆனால் அப்படியும் சீனிவாசன் விலக முன்வரவில்லை. இந்த நிலையில் இன்று ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
அதன்படி சீனிவாசன் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதில் கவாஸ்கர் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
7வது ஐபிஎல் தொடர் முடியும் வரை கவாஸ்கரே தலைவராக இருப்பார் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கவாஸ்கரை இடைக்காலத் தலைவராக நியமிப்பதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும் அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் சீனிவாசனின் பதவி அதிரடியாக முடிவுக்கு வந்துள்ளது.