திரும்பிக் கூட பார்க்காத படேல் சமூகம்.. பரிதவிப்பில் குஜராத் பாஜக.. மோடி மேஜிக் வீணாகுமா!
அகமதாபாத்: மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதில் குஜராத் மாநிலமும் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் படேல் சமூகத்தவரின் வாக்குகள் முழுமையாக கிடைக்காத நிலை நிலவுவதால், குஜராத் பாஜக தடுமாறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம். இங்கு கடந்த மக்களவை தேர்தலின்போது பாஜக அனைத்து தொகுதிகளையும் வென்றது. ஆனால் இம்முறை அப்படி வெல்வது பாஜகவுக்கு எளிதான செயலாக இருக்காது.
ரபேல் விவகாரம்.. ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் வருத்தம்
குஜராத்தில் 2014 ம் ஆண்டு அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் மொத்தமாக அள்ளிய பாஜகவுக்கு தொடர்ந்து அங்கு சரிவு ஏறபட்டு வருகிறது. 2017 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 99 இடங்களை மட்டுமே பாஜக பெற்றது. 2012 சட்டமன்ற தேர்தலில் 115 இடங்களை பெற்றிருந்த பாஜக 16 இடங்களை இந்தத் தேர்தலில் இழந்தது. குஜராத் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை விட சில தொகுதிகளை மட்டுமே பாஜக அதிகமாக பெற்றுள்ளது. அதேவேளையில் கடந்த 2012 தேர்தலில் 61 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ், 2017 தேர்தலில் 20 இடங்கள் கூடுதலாகப் பெற்று 81 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கும் காங்கிரசின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது ஒரு வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மணிசங்கர் அய்யர். இவர் பேசிய பேச்சுகளே பிரதமரின் பிரச்சாரத்துக்கு பிரம்மாஸ்திரமாக அமைந்தது. அதோடு குஜராத் தேர்தலின்போது ஜங்க்புராவில் மணி சங்கர் அய்யர் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது என்று பாஜக மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஜய் அகர்வால் கொளுத்திப் போட அது பற்றிக் கொண்டது.
பிரதமர் மோடி இதை தனது பிரச்சரமாக்கி இந்த பிரச்னையை பூதாகரமாக்கினார் என்று சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய அஜய் அகர்வால் கூறியிருந்தார். குஜராத்தில் பாஜக வென்றதற்கு இதுதான் காரணம் என ஆர் எஸ் எஸ் எஸ் கூறியதாகவும் அஜய் அகர்வால் தனது கடிதத்தில் கூறியிருந்தார். அதோடு அந்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோற்கும் நிலையில்தான் இருந்தது என்பது அஜய் அகர்வாலின் கருத்து.
இந்த சூழலில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் இப்போது அமிட்ஷா போட்டியிடுகிறார்.
இந்த தொகுதி தனக்கு கிடைக்கும் என்று குஜராத் முன்னாள் ஆனந்தி பென் -னும் காந்தி நகர் மக்களவை தொகுதியை கேட்டு காய் நகர்த்தி வந்தார். பாஜகவில் வேட்பாளர் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது காந்தி நகருக்கு வந்த ஆனந்தி பென் படேல், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காந்தி நகரின் பாஜக வேட்பாளர் என்று ஆனந்தியின் பெயரும் பல இடங்களில் எழுதப்பட்டது. இப்படி ஆனந்தி பென் படேல் குஜராத்தில் தேர்தல் வேலைகளை படு ஜரூராக செய்து கொண்டிருந்தார். அ
ப்போது பாஜகவின் மத்திய குழு காந்தி நகர் மக்களவை தொகுதியை அமித்ஷாவுக்கு வழங்கியது. இதில் கடும் அதிருப்தி அடைந்தனர் ஆனந்தி பென் படேலும் அவரது ஆதரவாளர்களும். ஆனந்தி பென் படேல் குஜராத் முதல்வராக இருந்தபோதே தனக்கு என ஒரு பெரும் ஆதரவாளர் படையை உருவாக்கி வைத்திருந்தார். இவரது அதிருப்தி மற்றும் அத்வானிக்கு போட்டியிட சீட் வழங்கப் படாதது ஆகியவை இந்த தேர்தலில் நிச்சயமாக அமித்ஷாவுக்கு எதிராக இருக்கும் என்று தெரிகிறது.
குஜராத்தை பொறுத்த மட்டில் படேல் இன மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை கவரவே பாஜக காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ. 3000 கோடி மதிப்பில் சிலை செய்தது. இருந்தாலும் பாஜகவால் படேல் இன மக்களை கவர முடியவில்லை. படேல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு ஹர்திக் படேல் என்பவர் குஜராத்தில் கடுமையாக போராடி வந்தார். அவருக்கு படேல் இன மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. அவர் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக போராடி வருவதால் இவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த தேர்தலின்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்தார்.
இப்போது ஹர்திக் படேல் நேரடியாக காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் ஹர்திக் படேல் நேரடியாக பிரச்சார மேடைகளிலேயே தாக்கப்படுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹர்திக் படேல் தாக்கப்பட்டார். அதன் பின்னர் அகமதாபாத்தில் அவர் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் புகுந்து பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்களை தாக்கினர். இதனால் ஹர்திக் பாஜகவினர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக படேல் இன மக்களை பாஜக எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவ ஹர்திக் படேலுக்கு வரும் கூட்டத்தை கண்டு பாஜக இப்போது அதிர தொடங்கியுள்ளது கண்கூடாக தெரிகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை இம்முறை பெற முடியாது என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.