கர்நாடக அரசு பெண் ஊழியர்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: காங். தேர்தல் அறிக்கையில் அதிரடி
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள காங்கிரஸ், அரசு ஊழியர்களை கவர் செய்யும் விதமாக, அரசு பெண் ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கும்போது 50 சதவீதம் மா
மங்களூர்: அரசு பெண் ஊழியர்களுக்கும், பஞ்சாயத்துகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் 50 சதவீத மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மங்களூர் நகரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே, 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள காங்கிரஸ், அரசு ஊழியர்களை கவர் செய்யும் விதமாக, அரசு பெண் ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கும்போது 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் அல்லது, ரூ.30,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல பஞ்சாயத்துகளில் பணிபுரியும் பெண்களுக்கும் இதே சலுகை பொருந்தும்.
இந்த பெண் ஊழியர்கள் வருடாந்திர வருமானம் ரூ. 2,50,000 மிகாமல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
தமிழகத்திலுள்ள அம்மா கேன்டீன் திட்டத்தை காப்பியடித்து, இந்திரா கேன்டீன் என்ற திட்டத்தை சித்தராமையா அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோல அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்தை போலவே ஸ்கூட்டர் திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.