284 ஆண்டுகளில் முதல் முறை.. கொரோனாவால் ரத்தாகுமா பூரி தேர்த் திருவிழா?
பூரி: 284 ஆண்டுகளில் முதல் முறையாக பூரி ஜெகன்னநாதர் கோவில் தேர்த் திருவிழா ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. கொரோனா பரவல் காரணமாக தேர்த் திருவிழாவை நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளதால் பக்தர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உலக அளவில் பிரபலமான திருவிழாக்களில் ஒன்று பூரி தேர்த் திருவிழா. பல லட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இதை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவிழாவை தற்போதைய சூழலில் நடத்த வாய்ப்பே இல்லை. எனவே 284 ஆண்டுகளில் முதல் முறையாக பூரி தேர்த் திருவிழா ரத்தாகும் என்று பேச்சு அடிபடுகிறது.
உலகப் பிரபலம்
உலகம் முழுவதுலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். பூரி ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்கள் இந்த விழாவில் பக்தர்களால் இழுக்கப்படும். வழக்கமாக ஜூன் 23ம் தேதி இந்த திருவிழா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இது நடைபெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
ரத்தாகுமா
திருவிழா தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனால் விழா நடைபெறுவது சந்தேகம்தான்று நம்பப்படுகிறது. காரணம் கொரோனா பரவல் தொடர்பாக தற்போது அமலில் உள்ள லாக்டவுன் மே 3ம் தேதிதான் விலக்கப்படுகிறது. ஆனால் அதன் பிறகும் கூட லாக்டவுன் நீடிக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. மேலும் மே மத்திக்குப் பிறகுதான் இந்தியாவில் கொரோனா உச்சத்தை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.
அரசு ஆலோசனைப்படி முடிவு
எனவே இதுதொடர்பாக மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி செயல்படுவது என்று விழாக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இருப்பினும் தேர்த் திருவிழாவுக்கு முன்பாக நடைபெறும் சாஸ்திர சம்பிரதாய நிகழ்வுகள் நாளை திட்டமிட்டபடி தொடங்குகின்றன. கோவிலின் உட்பகுதியில் இவை நடைபெறும். பூரி சங்கராச்சாரியார் ஜெகத்குரு சுவாமி நிச்சலனாந்தா சரஸ்வதி ஆலோசனையின் பேரில் இது நடைபெறுகிறது.
இதுவரை ரத்தானதில்லை
கடந்த 284 ஆண்டுகளில் ஒருமுறை கூட விழா தடைபட்டதில்லை. இதை விட மோசமான 1766ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய பஞ்சத்தின்போது கூட விழா தடை படவில்லை. அப்போது பல லட்சம் பேர் நாடு முழுவதும் பலியானார்கள். மேலும் காலரா பரவலின்போதும் கூட இந்த விழா ரத்து செய்யப்படவில்லை என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போதைய நோயின் தன்மை வேறுபட்டதாக இருப்பதால் திருவிழா நடைபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.