பாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால்.. தொழிலை விட்டுவிடுகிறேன் - பிரஷாந்த் கிஷோர் சவால்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 100 இடங்களுக்கு மேல் பாஜக வென்றால் நான் எனது தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஐந்தும் மாநில சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுக்கும் பணியை பிரஷாந்த் கிஷோர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை, இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பிரஷாந்த் கிஷோர் காரசாரமாக பேட்டி அளித்துள்ளார்.
பேத்தி திருமணத்தில் பாடகரான பஞ்சாப் முதல்வர் - பிரஷாந்த் கிஷோர் வேலையை தொடங்கிட்டாரோ?
வேறு வேலைக்கு செல்வேன்
அதில், "மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால் நான் இந்த தொழிலையே விட்டு விடுகிறேன். ஐபேக்கையே விட்டு விலகி விடுகிறேன். நான் வேறு ஏதாவது வேலைக்குச் செல்கிறேன். கண்டிப்பாக இந்த வேலையை செய்ய மாட்டேன்.
தகுதியானவன் அல்ல
உ.பி.யில் நான் தோற்றேன். காரணம் அங்கு நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் மேற்குவங்கத்தில் இந்த சாக்குப்போக்கு சொல்லும் வாய்ப்பே கிடையாது. தீதி (முதல்வர் மம்தா பானர்ஜி) எனக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். ஒருவேளை மேற்கு வங்க தேர்தலில் தோற்றால், நான் இந்த வேலைக்கு தகுதியானவன் அல்ல என்று விலகி விடுகிறேன்.
அதற்கு வரவில்லை
திரிணாமூல் காங்கிரஸ் அதன் மீதுள்ள பாரம் தாங்காமல் வீழ்ந்தால் தான் பாஜக வெல்ல முடியும். திரிணாமூல் காங்கிரஸில் சில உட்கட்சி பூசல்கள் உள்ளன. பாஜக, அந்த கோஷ்டி மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் கில்லாடியாகும். நான் இங்கு நண்பர்களைச் சம்பாதிக்க வரவில்லை. நான் கட்சியை வெற்றிப் பெற வைக்கவே இங்கிருக்கிறேன். இதற்காக நான் பணியாற்றும் போது சில கோஷ்டிகள் அவர்களைப் புறக்கணிப்பதாக கருதுகிறது. இதை தவிர்க்க முடியாது.
மோடிக்கு கூட்டம்
பாஜகவும் அமித் ஷாவும் 200 இடங்களில் வெல்வோம் என்கின்றனர், ஆனால் இது திரிணாமூல் கட்சியினரிடம் பதற்றத்தை அதிகரிக்கும் யுக்தி தான். வெறும் கூச்சல் போட்டால் மட்டும் தேர்தலில் ஜெயித்து விட முடியாது. பாஜகவின் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட வருவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும்தான் அதிகளவில் கூட்டம் சேருகிறது" என்று தெரிவித்துள்ளார். 2014 மக்களவை தேர்தலில், பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் பிரஷாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.