சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்தது அதிமுக பொதுக்குழு!
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரு துருவங்களாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அண்மையில் இணைந்தனர்.
இதையடுத்து, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர்செல்வமும் பொதுக்குழுவை கூட்டியுள்ளனர்.
பொதுக்குழு, செயற்குழு
பொதுக்குழு கூட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை, அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு, 750க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வர வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு அழைப்பாளர்கள் இல்லை
இவர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவர். ஆனால், செப்டம்பர் 12ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில், அவர்களுக்கு அழைப்பு இல்லை.
நிர்வாகிகளுக்கு அழைப்பு
மற்றவர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அழைப்பிதழ் உள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதவிர, மாவட்ட அமைச்சர்களும், தங்கள் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசி சம்மதிக்க வைத்துள்ளனர்.
ஏற்பாடுகள் தயார்
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தினை துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
95 சதவிகித நிர்வாகிகள் வருகை
பொதுக்குழுவில் பங்கேற்க 95 சதவிகித நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சசிகலா நீக்கம்
இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகலா நீக்கப்பட்டுள்ளார்.
சசிகலா நீக்கம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.