9ம் தேதி கர்நாடகாவின் பலத்தை காட்டுகிறோம்: வாட்டாள் நாகராஜ்
பெங்களூர்: கர்நாடகாவின் பலம் என்னவென்பதை காட்டப் போவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகளை எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
தண்ணீர் திறப்பு
கர்நாடக அரசு நேற்று இரவு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்த பிறகு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது. தண்ணீரை திறந்துவிட 3 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பந்த்
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் இது குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தண்ணீர் இல்லை
காவிரி நதியில் உள்ள அணைகளில் போதிய அளவு நீர் இல்லை. இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரி அல்ல என்றார் நாகராஜ்.
காட்டுகிறோம்
கர்நாடகாவின் பலம் என்னவென்பதை காட்டுகிறோம். இதற்காக வரும் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறோம். மாநிலத்தின் உரிமையை காக்க நடத்தப்படும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நாகராஜ் தெரிவித்தார்.