ஜனாதிபதி சுமித்ரா மகாஜன்.. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு?
டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வெங்கையா நாயுடு பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரா வேட்பாளரைப் போட்டால்தான் சிவசேனாவின் ஆதரவைப் பெற முடியும் என்பதால் அவர்களை ஐஸ் வைக்கும் வகையில் இந்த முடிவுக்கு பாஜக வந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பும் கூட சிவசேனா கட்சியினர் பிரதீபா பாட்டிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுமித்ரா மகாஜன் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். அவரை பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனராம். அவரும் தனது பயணத்தை ரத்து செய்து விட்டுக் காத்திருக்கிறாராம்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா
அதேபோல துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வெங்கையா நாயுடு இறுதி செய்யப்பட்டுள்ளாராம். தற்போது அமைச்சராக இருக்கிறார் வெங்கையா. இதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
ராஜ்யசபாவில் எதிர்ப்புகளை சமாளிக்க
துணைக் குடியரசுத் தலைவர்தான் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார். ராஜ்யசபாவில் மட்டும்தான் பாஜக இன்னும் பெரும்பான்மை பலத்தைப் பெறாமல் உள்ளது. எனவே வெங்கையா நாயுடு ராஜ்யசபா தலைவரானால், பாஜகவுக்கு சற்று தெம்பாகவும், பலமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போ திரவுபதி கதி?
முன்னதாக ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்முவின் பெயர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அவரது பெயரையும் நீக்கவில்லை. தொடர்ந்து பரிசீலித்து வருவதாக பாஜக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
ஜூலையில் தேர்தல்
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறும். அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.