தேர்தலுக்கு பிறகு மூன்றாவது அணி உருவாகுமா? நம்ம வாசகர்கள் சொன்ன அதிரடி கருத்து இதுதான்!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பிறகு தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வியை முன்வைத்து கேட்கப்பட்ட கருத்துக் கணிப்பில், நமது வாசகர்கள் சுவாரசியமான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், 3வது அணி மூலமாக, ஆட்சியை பிடிக்க தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகரராவ் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
தென் மாநிலத்திலிருந்து ஒருவரை பிரதமராக்க ஒரு அருமையான வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் முன்பாக, இரு பெரும் கட்சிகளின் கூட்டணிகளில் ஒன்றுகூட அறுதி பெரும்பான்மை பெறாத சூழல் எழ வேண்டுமே.
மோடி.. நிதின் கட்கரி யாரும் வேண்டாம்.. மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்!
மக்கள் கருத்து
இப்படி ஒரு சூழல் உருவாகுமா, மூன்றாவது அணி உதயமாகுமா என்ற கேள்விகள் இப்போதே மக்கள் மனதில் நிழலாட தொடங்கிவிட்டன. இந்த சூழ்நிலையில்தான், நமது 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில், லோக்சபா தேர்தலுக்கு பின் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு 4 ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டன. நமது வாசகர்கள் மனநிலை என்ன என்பதை அறியலாம் பாருங்க.
காங்கிரஸ் உதவி
3வது அணி உருவாக காங்கிரஸ் உதவி தேவைப்படும் என்றுதான், பெரும்பாலான வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 40.03% வாசகர்கள், காங்கிரஸ் உதவியோடு 3வது அணி அமையும் என கூறியுள்ளனர். எனவே, பெரும்பான்மை மக்கள், 3வது அணி அமையும், ஆனால் காங்கிரஸ் ஆதரவு வேண்டும் என நினைக்கிறார்கள்.
பாஜக பெரும்பான்மை
அதேநேரம், 3வது அணி அமைய வாய்ப்பே இல்லை என்று, 29.72% வாசகர்கள் கருதுகிறார்கள். ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துவிடும் என்பது இவர்கள் நம்பிக்கை என தெரிகிறது. மூன்றாவது அணி அமைக்க தேவையில்லாமல் பாஜகவே பெரும்பான்மை பெற்றுவிடும் என்று, 15.27% வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு பிறகு
மூன்றாவது அணி கண்டிப்பாக உருவாகும் என்று சொல்வோர் 14.98% ஆகும். 3வது அணியால்தான் ஆட்சியமையப்போகிறது என உறுதியாக நம்புபவர்கள் இவர்கள் என தெரிகிறது. ஆக மொத்தம், இதுதான் வாசகர்கள் எண்ணம். தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என்பது வரும் 23ம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடப்போகிறது.