மக்கள் யார் பக்கம் என தெரிந்து விட்டது.. மோடியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.. ராகுலுக்கு அறிவுரை
ஹுப்ளி: மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி அளிப்பது குறித்து, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மக்களவை சபாநாயகர் தான் முடிவு செய்வார் என மத்திய அரசு கூறியுள்ளது.
17-வது மக்களவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தனித்தே 303 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக. ஆனால் காங்கிரஸ் கட்சியோ கடந்த முறை போலவே, எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற வழியில்லாமல் தவிக்கிறது.
இச்சூழலில் புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 15-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களிலும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
பின்னர்19-ம் தேதி மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இரு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுமார் 15 நிமிடங்கள் அவருடன் ஆலோசனை நடத்தினார். ஜோஷியுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்
வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் உதவியுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
யாருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி அளிப்பது என்பதை, மக்களவைக்கு தேர்வாக உள்ள புதிய சபாநாயகர் தான் முடிவு செய்வார் எனவும் கூறினார்.
தாம் சோனியா காந்தியை சந்தித்த போது நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய மசோதாக்களை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஒத்துழைப்பு தருமாறு கோாிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
முக்கிய விவகாரங்களில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு சோனியா காந்தியும், தம்மிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு நான் அவரிடம் உத்தரவாதம் அளித்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். மக்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்திருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சிப்பதை ராகுல் காந்தி இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர குறைந்தது 54 மக்களவை உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 52 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.