உ.பியில் ஒரே கூத்து.. முலாயம் சிங் 'சைக்கிள்' தப்பியது!
லக்னோ: உட்கட்சி பிரச்சினை முற்றியிருந்த நிலையில், முலாயம் சிங் யாதவ் மற்றும் அவர் மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் நடுவே ஏற்பட்டுள்ள பனிப்போர் காரணமாக இத்தனை காலம் கட்டி காத்து வந்த, சைக்கிள் சின்னம் பறிபோய்விடும் சூழல் எழுந்திருந்தது. இந்த பிரச்சினைக்கு இன்று மதியம் தற்காலிக பிரேக் விழுந்துள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. நேற்று கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதற்கு போட்டியாக அகிலேஷ் 35 பேர் கொண்ட தனிபட்டியல் ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது. இந்நிலையில்தான், 6 வருடங்களுக்கு கட்சியிலிருந்து, அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கட்சியா, அகிலேஷா
எனவே கட்சிக்காரர்கள்தான் தர்ம சங்கடத்தில் சிக்கினர். அவர்களுக்கு அகிலேஷின் பிம்பம் பிடிக்கும். அதேநேரம் கட்சியையும் நேசிக்கிறார்கள். அகிலேஷ் vs கட்சி என நிலைமை மாறிப்போனதில் அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தது.
சைக்கிள் போச்சே
இதில் கவனிக்க வேண்டியது, நாடாளுமன்ற உறுப்பினரான ராம் கோபால் யாதவையும், முலாயம்சிங் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருந்ததுதான். கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அவர், தனக்கு அதே சின்னம்தான் வேண்டும் என தேர்தல் கமிஷனையோ கோர்ட்டையோ அணுகியிருக்க முடியும்.
சுயேட்சை
இப்படி ஒரு பிரச்சினை எழுந்தால், வரும் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சைக்கிள் சின்னத்தை இழக்க நேரிட்டிருக்கும். வழக்கு முடியும்வரை சின்னத்தை முடக்கி வைக்க உத்தரவு வந்திருந்தால் இதுதான் நிலைமையாகிருக்கும். இன்னொரு வாய்ப்பு இருந்தது. அது, என்னவென்றால், அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுவது.
காங்கிரசில் இணைவதாக வதந்தி
சுயேட்சையாக மோதுவது அல்லது, காங்கிரசில் இணைவது அகிலேஷ் யாதவ் திட்டமாக இருந்திருக்கும் என்கிறார்கள். ஆனால் 24 மணி நேரத்திற்குள் அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முலாயம் சிங் இன்று மதியம் வாபஸ் பெற்றார். எனவே அவரின் சைக்கிள் சின்னம் தப்பிவிட்டது.